வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில். இன்று முதல் மே 19 வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
அதன்படி இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வருகின்ற 19-ஆம் தேதி இரவு 10 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்கு கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். நாள்தோறும் காலை நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
வைகாசி மாத பூஜையுடன், வருகின்ற 19-ஆம் தேதி கோயில் பிரதிஷ்டை தினமும் சேர்ந்து வருவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை நடை திறப்பை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்புப் பேருந்துகளை கேரள அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், பம்பையில் வாகனம் நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. இனிமேல் பம்பையில் வாகனங்கள் நிறுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
