Sorting by

×

தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனின் வயது மூப்பு மற்றும் உடல்நிலையைக் காரணம் காட்டி, காட்பாடியில் அவருக்குப் பதிலாக அவரது மருமகள் சங்கீதாவுக்குத்தான் சீட் எனத் தகவல் பரவின. இந்தச் சூழலில், துரைமுருகன் மீண்டும் போட்டியிடும் முடிவுக்கு வந்திருப்பதோடு, காட்பாடியில் தனது மகனும் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் மூலமாகக் களப் பணிகளையும் வேகப்படுத்தியிருக்கிறாராம்.

துரைமுருகன்

களச் சூழலும் தனக்குச் சாதகமாக இருப்பதாகக் கருதும் துரைமுருகன், `இம்முறை எப்படி பிரசாரம் செய்யலாம்… மக்களை எப்படியெல்லாம் குளிர்விக்கலாம்?’ என்ற ஆலோசனையில் இருக்கியிருக்கிறாராம். பல்வேறு பலே திட்டங்களுடன், அரசியலில் ரீ-என்ட்ரி கொடுக்க தன்னுடைய உடம்பை திடப்படுத்திக் கொண்டிருக்கிறாராம் துரைமுருகன்.

ஆடுதுறை பேரூராட்சி சேர்மனாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸின் தீவிர ஆதரவாளரும் அவர் அணியைச் சேர்ந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளருமான ம.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். தொடர்ச்சியாக ஆளும் கட்சிக்கு எதிராகக் கடுமையாகப் பேசி பேசிவந்த அவர், சமீப காலமாக அடக்கி வாசிப்பதால், ‘ம.க.ஸ்டாலின் தி.மு.க-வில் இணையப் போகிறார்’ என்று பேசப்பட்டது.

இந்நிலையில், ஆடுதுறையில் கட்டப்பட்ட தி.மு.க முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணியின் நினைவு மண்டபத்தை அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் திறந்து வைத்தார். அதற்கான முன்னெடுப்பைச் செய்த ம.க.ஸ்டாலின், நேருவின் காலில் விழுந்து ஆசி வாங்கியதைப் பார்த்து உடன்பிறப்புகளே வாயடைத்துப் போனார்களாம். ‘பா.ம.க-வில் பிளவு நிலவுவதால் தி.மு.க-வில் இணைய முட்டி மோதுகிறார் ம.க.ஸ்டாலின். அதற்கு லோக்கல் உடன்பிறப்புக்கள் முட்டுக்கட்டை போடுவதால், இணைப்பு இழுத்துக்கொண்டு போகிறது’ என்கிறார்கள் டெல்டா தி.மு.க-வினர்.

அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை பஞ்சாயத்து வெடிக்கும்வரை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், பா.வளர்மதி, தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால், கே.பி.முனுசாமி என எட்டு பேர் ஆட்சி மன்றக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். 2022-ல் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு, மற்ற ஆறு பேரும் குழுவின் உறுப்பினர்களாகத் தொடர்ந்தனர். தற்போது, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், இன்பதுரை ஆகிய மூவரையும் ஆட்சிமன்றக் குழுவில் புதிதாக இணைத்திருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதன்மூலமாக, குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்திருக்கிறது. விஷயம் அதுவல்ல… அந்த அறிவிப்பு இரட்டை ‘மணி’களில் மற்றொரு மணியான முன்னாள் அமைச்சருக்கு கடுமையான வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறதாம். ஏற்கெனவே தலைமைக் கழகப் பொறுப்பிலும் இல்லை, தற்போது ஆட்சிமன்றக் குழுவிலும் பெயர் சேர்க்கப்படாததால் கடுமையான அப்செட்டில் இருக்கிறாராம். ‘2017 தொடங்கி தற்போது வரை டெல்லி தொடர்பான பல்வேறு விஷயங்களில் கூடவே இருந்தவன் நான். என்னைத் தொடர்ந்து புறக்கணிப்பது சரியல்ல’ என தன் ஆதரவாளர்களிடம் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட நான்கு எஸ்.பி-க்களில் மூன்று பேரின் குடும்பத்தினர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாம். இன்னொருவர் மாவட்ட அமைச்சருக்குத் தீவிர விசுவாசியாக இருந்து வந்தாராம். அதுதொடர்பான ரிப்போர்ட் அடிப்படையில்தான் நான்கு எஸ்.பி-க்களையும் தேர்தல் ஆணையம் மாற்றியிருக்கிறது.

இவர்கள் அனைவரும் டி.ஜி.பி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இடமாறுதலைத் தொடர்ந்து ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றத் திட்டமிட்டுள்ளதாம். காத்திருப்போர் பட்டியலுக்குச் செல்லும் நிலை இருப்பதால், ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக ஐ.ஜி அந்தஸ்தில் இருந்தபடி தகவல்களைப் பார்த்துச் சொன்ன அதிகாரி ஒருவர் மெடிக்கல் லீவ் லெட்டரை இப்போதே தயாராக வைத்திருக்கிறாராம்.

புதிய தமிழகம் கட்சியை தே.ஜ கூட்டணிக்கு இழுத்து வரும் இறுதிக்கட்ட பணியில் மும்முரமாகியிருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அதுதொடர்பாக, டாக்டர்.கிருஷ்ணசாமியுடன் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகளை வேலுமணி நடத்தி முடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ‘ஐந்து சீட் என்பதில் உறுதியாக இருந்த கிருஷ்ணசாமியின் மனதை மாற்றி, இரண்டு சீட்டுகளை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டார் வேலுமணி. விரைவிலேயே கூட்டணி உடன்படிக்கைக் கையெழுத்தாகிவிடும்’ என்கின்றன

எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள். அதேசமயம், புதிய தமிழகத்துக்குத் தேவையான ‘உதவிகள்’ அனைத்தையும் செய்வதற்கு, பா.ஜ.க-வின் முன்னணி தலைவர் ஒருவர் மனம் திறந்திருப்பதால், வரும் வாரத்திலேயே எடப்பாடியுடன் கிருஷ்ணசாமி கைக்குலுக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *