பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாவட்டமான பன்னுவில், தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். இதற்கு முன்னதாக பஜூர் மாவட்டத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகளே காரணம் எனப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதிரடி வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில், குறைந்தது ஆப்கானிஸ்தானின் 70 போராளிகள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் துணை உள்துறை அமைச்சர் தலால் சவுத்ரி மற்றும் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் உள்ள பாகிஸ்தான் தாலிபான் (TTP) மற்றும் அதன் துணை அமைப்புகளின் 7 முகாம்கள் மீது உளவுத்துறை தகவலின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 70 முதல் 80 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள தலைவர்களின் உத்தரவின் பேரில் நடப்பதாகப் பாகிஸ்தானிடம் உறுதியான ஆதாரங்கள் உள்ளன.” என்றனர்.
பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை மறுத்த தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், “பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்கள் மதரஸாக்கள் மற்றும் குடியிருப்புகள் போன்ற பொதுமக்கள் வாழும் பகுதிகளிலேயே நடத்தப்பட்டன. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 18-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் வான்வெளி வரம்பையும், இறையாண்மையையும் மீறியுள்ளது. இதற்குப் பாகிஸ்தானே பொறுப்பேற்க வேண்டும். 70 போராளிகள் கொல்லப்பட்டனர் என்ற பாகிஸ்தானின் தகவல் முற்றிலும் பொய்யானது” எனக் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து, காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து, தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. தங்கள் நாட்டைப் பாதுகாப்பது தங்களின் சட்டக் கடமை என்றும் ஆப்கானிஸ்தான் எச்சரித்துள்ளது.

தாக்குதல் நடந்த பகுதிகளில் கிராம மக்கள் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். தாக்குதல் நடந்தப் பகுதியில் வசிக்கும் உள்ளூர் பழங்குடியினத் தலைவர் ஹபீபுல்லா, “ உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. கொல்லப்பட்டவர்கள் தாலிபான்களோ அல்லது ராணுவ வீரர்களோ அல்ல, அவர்கள் ஏழை கிராமவாசிகள்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தானின், பாதுகாப்பு ஆய்வாளர் அப்துல்லா கான், “பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தீர்க்க கத்தார், துருக்கி மற்றும் சவுதி தலைமையிலான மத்தியஸ்தங்கள் கூடத் தவறிவிட்டன என்பதை பாகிஸ்தான் தாக்குதல்கள் காட்டுகின்றன. இந்தத் தாக்குதல்கள் சூழலை மேலும் மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் ஏற்கனவே இருநாடுகளுக்கும் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் மேலும் போர்ப் பதற்றம் உருவாகியிருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
