‘செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி – கிழக்கு நேர மண்டலம்’ என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) ஈரானுக்கு நேரம் குறித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அதையடுத்து நேற்று காலை (அமெரிக்க நேரப்படி), ‘ஈரான் நான் சொன்ன நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கவில்லை என்றால், ஈரானின் ஒட்டுமொத்த நாகரிகமும் அழிக்கப்படும்’ என்று வேறு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ஈரான் போர் ‘இரண்டு வாரம் நிறுத்தம்’ என அறிவித்துள்ளார் ட்ரம்ப்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக வலைதள பதிவு…
“பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீருடனான பேச்சுவார்த்தை அடிப்படையில், அவர்கள் கேட்டு கொண்டதன் படி, இன்று ஈரானிற்கு அனுப்படவிருந்த படைகளை நிறுத்தி வைக்கிறேன்.
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக, உடனடியாக, பாதுகாப்பாக திறக்க ஒப்புக்கொண்டுள்ளதால், ஈரான் மீதான குண்டு வீச்சு மற்றும் தாக்குதலையும் நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளேன்.
இது ஒரு இருதரப்புப் போர்நிறுத்தமாக இருக்கும்!
ஈரானின் 10 பரிந்துரைகள்
இதற்கான காரணம் என்னவென்றால், நாம் ஏற்கனவே ஈரானில் அனைத்து ராணுவ இலக்குகளையும் அடைந்து, அதை தாண்டியும்விட்டோம்.
மேலும், ஈரானில் நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான திட்டவட்டமான உடன்படிக்கையிலும் வெகுவாக முன்னேறி இருக்கிறோம்.
ஈரானின் 10 பரிந்துரைகளை பெற்றிருக்கிறோம். அது பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உகந்த அடிப்படை என்று நாங்கள் நம்புகிறோம்.

இரண்டு வாரம்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த கால கருத்து வேறுபாடுகளின் பல்வேறு அம்சங்கள் கிட்டத்தட்ட அனைத்தும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்து நிறைவு செய்வதற்கு இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுகிறது.
அமெரிக்காவின் அதிபராகவும், மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதியாகவும், இந்த நீண்டகாலப் பிரச்னை ஒரு தீர்வின் விளிம்பை எட்டியிருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
