மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அதே போல், துறையூர் தொகுதி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் அங்கு போட்டியிட உள்ள வேட்பாளருக்கும் ஆதரவு திரட்டினார்.
அதனைத்தொடர்ந்து, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
“நான் மீண்டும் மீண்டும் திருச்சிக்கு வருவது போல் திராவிட மாடல் அரசும் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். கடந்த 2021 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் முழு வெற்றியை தந்து இரண்டு சிறப்பான அமைச்சர்களை தந்துள்ளீர்கள். அதே போல வரும் தேர்தலிலும் நூறு சதவீத வெற்றியை தருவீர்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.

திருச்சிக்காக பல்வேறு முத்திரை திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம் என்கிற உரிமையோடு நான் வாக்கு கேட்கிறேன். பஸ் ஸ்டாண்ட் ஏர்போர்ட்டை மிஞ்சும் அளவிற்கு உள்ளது என பக்கத்து மாநிலத்தவர் வியந்து போய் வீடியோ போடும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் பேருந்து நிலையம், 9 கூட்டு குடி நீர் திட்டங்கள், சூரியூரில் மினி ஸ்டேடியம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம், துறையூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, மணப்பாறையில் சிப்காட் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
டி.வி.எஸ் டோல்கேட்டில் காமராஜர் பெயரில் அமைய உள்ள நூலகம், டைடல் பூங்கா, ஒலிம்பிக் அகாடமி உள்ளிட்டவற்றை மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் நான் திறந்து கைக்க இருக்கிறேன். தலைநகர் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி வளர்ந்து கொண்டுள்ளது. 2021 ல் மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளோம். மகளிருக்கான விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை வழங்கி உள்ளோம். காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம் தேர்தலில் அறிவிக்காத திட்டங்கள்.

புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டதை நிறைவேற்றி உள்ளோம். மகளிர் உரிமை தொகையை தேர்தலை காரணம் காட்டி பா.ஜ.க-வினர் தடுக்க நினைத்தார்கள். அதை முன்கூட்டியே அறிந்து ரூ. 5000 வழங்கி உள்ளோம். தமிழ்நாட்டில் சாதி கலவரமோ, பா.ஜ.க ஆளும் மாநிலங்களை போல் மத கலவரமோ இல்லை. உத்தரபிரதேசம் போல் கும்பல் வன்முறை இல்லை. அதெல்லாம் வர வேண்டும் என பா.ஜ.க செய்த சூழ்ச்சிகளை முறியடித்து உள்ளோம். அமைதியும், மனித வளமும் இருப்பதால் தான் எண்ணற்ற முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அதிலும், இல்லதரசிகளுக்கு ரூ. 8000 கூப்பன் வழங்க உள்ளோம். தமிழ்நாடு முழுக்க இல்லத்தரசி திட்டம் குறித்து தான் பேச்சாக உள்ளது.
பெண்கள் சேலை வாங்கினால் கூட தனக்கு பிடித்த கடையில், தனக்கு பிடித்த டிசைன் வாங்க வேண்டும் என நினைப்பார்கள். அதை மனதில் வைத்து தான் இல்லத்தரசி திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிய அ.தி.மு.க-வும், இந்தியாவை வீழ்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் பா.ஜ.கவும் இணைந்து அமைத்துள்ள கூட்டணியை இந்த முறையும் மக்கள் வீழ்த்த வேண்டும்.
சம்மந்திக்கு காண்ட்ரக்ட் கொடுக்கவே ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க அரசின் திட்டங்கள் தரமானதாக இருக்கும். கலைஞர் ஆட்சியில் கொடுத்த டி.வி இன்றும் பலர் வீட்டில் இயங்கி வருகிறது. அது, கலர் டிவியாக மட்டுமல்லாமல், கலைஞர் டி.வி-யாகவும் உள்ளது. மகளிர் உரிமை தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என 2021 ல் தேர்தல் அறிக்கையில் தி.மு.க அறிவித்த போது தன் வீட்டில் உள்ள ஜெராக்ஸ் மிஷினை ஆன் செய்து அதை காப்பி அடித்து ரூ. 1500 என அறிவித்தவர் எடப்பாடி பழனிசாமி. அண்மையில் மதுரையில் ஒரு சம்பவம் நடந்தது. என்.டி.ஏ ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் தான் மதுரையில் அவர்கள் நடத்திய கூட்டத்திலிருந்து பெரியார் படம் அகற்றப்பட்டது.

பா.ஜ.க கூறிய உடனே எடப்பாடி பழனிச்சாமி பெரியார் படத்தை அகற்றி உள்ளார். அ.தி.மு.க கட்சியை அடிமை கூட்டமாக உருவாக்கியது தான் பழனிசாமியின் சாதனை. திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என சிரித்து கொண்டே கூறியவர் தான் பழனிசாமி. பா.ஜ.க-வின் பாதம் தாங்கி தான் பழனிசாமி. குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற காரணம் அ.தி.மு.க தான். பா.ம.க-வின் அன்புமணியும் அதற்கு ஆதரவு தெரிவித்தார். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என கூறியவர் தான் பழனிசாமி. பழனிசாமி குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறாரா, இல்லையா என்பதை தற்போது அவர் வெளிப்படையாக கூற வேண்டும். மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்தார் பழனிசாமி. பா.ஜ.க உடன் கூட்டணி சேர்ந்து முழு சந்திரமுகியாக, அதாவது முழு சங்கியாகவே மாறி உள்ளார் பழனிசாமி. கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க தான் என்கிறார்கள்.
ஆனால், எல்லா கட்சியும் பா.ஜ.க உடன் தான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மாப்பிளை அவர் தான், ஆனால் அவர் போட்டுள்ள சட்டை என்னுடையது என சூப்பர் ஸ்டார் பட காமெடி போல் அவர்கள் கூட்டணி உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவோம் என மோடி இதுவரை கூறவில்லை. என்.டி.ஏ ஆட்சி என தான் பேசுகிறார். ஊழல் புகார்களிலிருந்த, ரெய்டுகளிலிருந்தும் தப்பிக்க மொத்த கட்சியையும் பா.ஜ.க-வுடன் அடகு வைத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. மக்கள் வாக்களிக்காமலேயே எம்.எல்.ஏ-க்களை ஏலத்திற்கு எடுத்து முதல்வரானார். அவர், மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை அடகு வைப்பது மட்டுமல்ல, விற்றே விடுவார். நேரடியாக தமிழ்நாட்டிற்குள் வந்தால் பா.ஜ.க-வை நோட்டாவிற்கு கீழ் அனுப்பி விடுவார்கள். எனவே, அ.தி.மு.க முகமூடி அணிந்து வந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டிற்கு பல அநீதிகள் செய்து விட்டு தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி. பிரதமரால் தமிழ்நாட்டிற்கு இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம் என கூற முடியவில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?. தமிழ்நாடு எப்படி தலை நிமிர்ந்து உள்ளது என பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு வாரம் தங்கி இருந்து தெரிந்து கொள்ளட்டும். தமிழ்நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி தொடர திராவிட மாடல் தொடர வேண்டும். தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்க வேண்டும். என்.டி.ஏ ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை மாற்றக்கூட தயங்க மாட்டார்கள். நம் எதிரிகளையும் உதிரிகளியும் வீழ்த்த வேண்டும். நாம் போராடுவது தி.மு.க-வின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக. டப்பா என்ஜின் முன் நம் சூப்பர் பாஸ்ட் என் ஜின் ஒரு போதும் தலைகுனியாது. டெல்லி அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணியை வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
