Sorting by

×

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வரலாற்று பக்கத்தில் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப்பெரிய பாளையமாகவும் எட்டப்ப நாயக்கர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகவும் எட்டயபுரம் விளங்கியது. மகாகவி பாரதியாருக்கு “பாரதி” என்று பட்டம் கொடுக்கப்பட்டது எட்டப்ப நாயக்கர்களால் தான். தூத்துக்குடி மாவட்டத்திலேயே மிகவும் பிரம்மாண்டமான அரண்மனையாக எட்டயபுரம் அரண்மனை திகழ்ந்து வருகிறது.

சீரமைப்பு பணிகள்

பாரதியார் இல்லம்

பாரதி பிறந்த இல்லம், சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவர் நினைவு மண்டபம், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான “நாத ஜோதி” முத்துசாமி தீட்சிதர் நினைவு மணி மண்டபம், எட்டீஸ்வரர் திருக்கோயில், பிரம்மாண்ட தெப்பக்குளம், பாரதி வழிபட்ட காளியம்மன் கோயில் என பல சிறப்புகளைக் கொண்டது எட்டயபுரம்.

எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பெருமாள் கோயில் தெருவில் பாரதியார் நினைவு இல்லம் உள்ளது.  இந்த இல்லம் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லம் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்.

இந்த இல்லத்தில் மகாதேவி என்பவர் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி மாலை 6 மணிக்கு பார்வையாளர் நேரம் முடிவடைந்தவுடன், இல்லத்தின் உட்பகுதி கதவுகளை அடைத்த காப்பாளர் மகாதேவி, பின்னர் வெளிப்புறம் உள்ள கதவை மூடினார். அப்போது, திடீரென பாரதியார் இல்லத்தின் முன்பு பகுதி மேல்மாடியின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதனால் கீழ் தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் விழுந்தன.

சேதமடைந்த மேற்கூரை

இதன் காரணமாக பாரதியார் இல்லத்தின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.  மேற்கூரை இடிந்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்த காப்பாளர் மகாதேவி உடனடியாக வருவாய்த்துறைக்கு தகவல் அளித்தார்.  வட்டாட்சியர் சுபா மற்றும் அதிகாரிகள் பாரதியார் நினைவு இல்லத்துக்கு வந்து பார்வையிட்டனர். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக வந்து, பாரதியார் இல்லத்துக்கு சென்ற மின் இணைப்பை துண்டித்தனர்.  கடந்த 1973-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவு இல்லாமாக மாற்றினார்.

அப்போதைய கூட்டுறவுத்துறையின் அமைச்சர் ஆதித்தனார் தலைமையில் கடந்த 12.5.1973-ம் தேதி எட்டயபுரத்தில் நடந்த விழாவில், பாரதியார் நினைவு இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக முதல்வர் கருணாநிதி அறிவித்து திறந்து வைத்தார். தற்போதைய முதல்வர்ஸ்டாலின், பாரதியார் நினைவு இல்லம் உள்ளிட்ட 17 புராதன கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோயை சமீபத்திய மாநில பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.

சேதமடைந்த மேற்கூரை

மழையின் காரணமாக..!

இந்த நிலையில், சேதமடைந்த பாரதி இல்லத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், “பாரதியாரின் இல்லத்தின் மேற்கூரை கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. பார்வையாளர் நேரம் முடிந்ததால் பார்வையாளர்கள் மீது கற்கள் விழவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொறியாளர்கள்  சேதத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இல்லம் முழுவதுமாக சீரமைக்கப்படும்வரை சுற்றுலாப் பயணிகள் யாரும் பாரதி இல்லத்திற்கு வருகை தர வேண்டாம். பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *