Sorting by

×

கர்நாடகத்தில் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு வன்கொடுமைக்குள்ளாக்கியதாக பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சிலரால் அளிக்கப்பட்டுள்ள புகாரில், பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவற்றை 3,000 காணொலிகளாகப் பதிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின்(மஜத) எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா ஆகியோா் மீது ஏப். 27ஆம் தேதி பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா, எச்.டி.ரேவண்ணா ஆகியோா் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கக் கூடுதல் டிஜிபி பி.கே.சிங் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்தது. அந்தக் குழு தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்ட நிலையில், அவரை இந்தியா அழைத்து வந்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்து பிரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரைக் கடத்திச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின்(மஜத) ஹோலேனார்சிபுரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணா, கைது செய்யப்பட்டு, மே 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாலியல் வழக்கில் தொடர்புடைய ஆள்கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணா தரப்பில் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

எச்.டி.ரேவண்ணாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன்(மே. 13) முடிவுற்ற நிலையில், இந்த மனுவை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஆள்கடத்தல் வழக்கில் ரேவண்ணாவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி இன்று (மே. 13) உத்தரவிட்டுள்ளது. சாட்சியங்களைக் கலைக்க முற்படக் கூடாது எனவும், வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *