தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல்களை அரசியல் இயக்கங்கள் வெளியிட்டு வருகின்றன. அ.தி.மு.க தரப்பில் களமிறங்கும் முக்கிய நிர்வாகிகளின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி ( உதகமண்டலம்) தொகுதியை கூட்டணி கட்சியான பா.ஜ.க – விற்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது அ.தி.மு.க தலைமை.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஊட்டி தொகுதியை பா.ஜ.க கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியது. இந்த தேர்தலில் ஊட்டி தொகுதியை பா.ஜ.க – விற்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஆனால், ஊட்டி தொகுதியை பா.ஜ.க -வுக்கு ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது அ.தி.மு.க தலைமை. இதனை சற்றும் எதிர்பாராத அக்கட்சியின் நிர்வாகிகள், ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நேற்று மாலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க அதிருப்தி நிர்வாகிகள், ” ஊட்டி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் தான் என நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் அதீத நம்பிக்கையுடன் களத்தில் இறங்கி வேலை செய்து வந்தார்.

சமவெளி பகுதியில் பா.ஜ.க – விற்கான தொகுதிகளை ஒதுக்க இருப்பதாக தலைமை கூறியிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இப்படி செய்திருக்கிறார்கள். இந்த முடிவை தலைமை நிச்சயம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோம்” என்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
