Sorting by

×

“நாங்கள் எப்போதும் மதசார்பற்ற கொள்கை என்பதிலோ, மதசார்பற்ற சமூக நீதி என்ற நிலைப்பாட்டிலோ சமரசம் வைத்துக் கொள்ள மாட்டோம். நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்று இஃப்தார் நிகழ்ச்சியில் பேசி பா.ஜ.க -வுடன் கூட்டணி என்கிற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் த.வெ.க தலைவர் விஜய். 

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பா.ஜ.கவுடன் த.வெ.க கூட்டணி அமைக்க போகிறது என்கிற செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியுடன் த.வெ.க கூட்டணி வைக்கப்போகிறது என்று செய்திகள் வெளியான நிலையில், தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதி செய்தது காங்கிரஸ். இதனைத் தொடர்ந்து பா.ஜ.கவுடன் கூட்டணி என்கிற செய்திகள் கிளம்பியது, தமிழக அரசியல் களம் மும்முனை போட்டியை நோக்கி செல்வதாகவே தோன்றியது. 

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அதற்கு தோதாக த.வெ.க வின் பொதுச்செயலாளர் ஆனந்த், அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையும் மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் பல்வேறு நிர்வாகிகள், கூட்டணி அமைத்தால் மட்டுமே, நமது வெற்றியை உறுதி செய்ய முடியும் என்கிற கருத்தை முன்வைத்துள்ளனர். இந்த விவரங்கள் வெளியான பிறகு, கூட்டணி குறித்த பேச்சுக்கும் மதிப்பு கூடியது.

அதே நேரம் த.வெ.க தலைமைக்கு நெருக்கமானவர்கள், “கூட்டணி அமைப்பது ஓ.கே. தான். ஆனால் யாருடன் கூட்டணி என்பதில் நாம் நிதானித்து செயல்பட வேண்டும் . நம் கட்சியின் வாக்கு வங்கியில் பிரதானமாக இருப்பது, தலித் மற்றும் சிறுபான்மை வாக்குகளே. பா.ஜ.க உள்ள அணியில் நாம் இணைந்தால் அந்த வாக்குகள் நமக்கு கிடைக்காமல் போகும்” என விஜய்யிடம் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். 

மற்றொருபுறம் ஆந்திராவை சேர்ந்த ஒரு டீம் சென்னையில் முகாமிட்டு விஜய்க்கு நெருக்கமானவர்களை சந்தித்து தே.ஜ.கூட்டணியில் இணைய அழுத்தம் கொடுத்து வந்தார்கள். த.வெ.க-வில் புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் கூட்டணிக்கு சென்றால், குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெறலாம். ஆட்சியிலும் பங்கேற்று கட்சியை வலுப்படுத்தலாம் என்று விஜய்க்கு ஐடியா கொடுத்தனர்.

ஆனால், ஆதவ் அர்ஜூனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகிய இருவர் பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பது நம் கொள்கைக்கு நாமே வேட்டுவைப்பது போல் ஆகிவிடும் என்று கூட்டணிக்கு கட்டை போட்டனர். 

கடந்த வாரம் விஜய் அலுவலகத்தில் வைத்து கூட்டணி குறித்து காரசார விவாதம் நடந்துள்ளது. விஜய், “நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று மூத்த நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டார். உடனே ஆதவ் அர்ஜூனா, “பா.ஜ.க கூட்டணிக்கு செல்வதென்றால் 90 தொகுதியை நாம் கேட்போம். நாம் சரிபாதி அமைச்சர்களையும் கேட்போம்” என சொல்ல, அது எப்படி கொடுப்பார்கள் என்று மற்றொரு நிர்வாகி சொல்லியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா

 “அதற்கு நாம் தனியாகவே நிற்கலாம். நம்மை நம்பியுள்ள சிறுபான்மையினர் வாக்குகளை நாம் இழக்க முடியாது. இந்த தேர்தலுக்காக நம் கொள்கையை விட்டுக்கொடுத்தால், எதிர்காலத்தில் நம்மால் அரசியல் செய்ய முடியாது” என்று பேசியிருக்கிறார்.

மற்றொருபுறம் ஜான் ஆரோக்கியசாமி, “நமது சர்வேபடி நாம் இப்போது இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறோம். நமக்கு வலுவான வாக்குகள் உள்ள இடங்களை குறிவைத்து வேலை செய்தாலே, ஐம்பது தொகுதிகளில் வெற்றியை கூட பெறலாம். நம்மை தவிர்த்து ஆட்சியை யாரும் பிடிக்க முடியாது. எதற்காக துணை முதல்வர் பதவிக்காக நம் கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டும். ஒரு போதும் பா.ஜ.க அணி வேண்டாம்” என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார். 

இதன்பிறகே தனித்து போட்டியிடலாம் என்று விஜய் முடிவெடுத்தார். இந்த முடிவை தெரிந்த அன்று இரவே கொளத்துாரில் நடந்த கூட்டத்தில், “எங்களிடம் பா.ஜ.க பேரம் பேசியது. நாங்கள் மதவாத சக்திகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம்” என்று போட்டுடைத்தார் ஆதவ். 

மற்றொரு தள்ளிப்போய் கொண்டே இருந்த த.வெ.க-வின் இஃப்தார் நிகழ்ச்சியை உடனடியாக நடத்த முடிவெடுத்தனர். அந்த கூட்டத்தில் வைத்து தங்கள் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த த.வெ.க முடிவெடுத்தது. ஜான் மற்றும் ஆதவ் தரப்பு கச்சதமாக காய்நகர்த்தி விஜய் பேச்சை வடிவமைத்தனர். இவர்கள் கருத்தை விஜய் உள்வாங்கிய பிறகே, தே.ஜ.கூட்டணிக்கு நோ சொன்னார் விஜய்.  

ஜான் ஆரோக்கியசாமி

அவர்களின் மூவ் படியே, “நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்து சில வதந்திகள் சொல்லப்படுகிறது. அந்த டீம், இந்த டீம் என சொன்னார்கள், ஆனால் மக்களின் டீம் என எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அந்த செய்தியையெல்லாம் கேட்டு நீங்கள் குழப்பம் அடைந்திருப்பீர்கள். நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன். நான், நாங்கள் எப்போதும் மதசார்பற்ற கொள்கை என்பதிலோ, மதசார்பற்ற சமூக நீதி என்ற நிலைப்பாட்டிலோ சமரசம் வைத்துக் கொள்ள மாட்டோம். நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

நமது முதல் மாநாட்டில் யாருக்காகவும் எதற்காகவும் எந்தவிதமான சமரசமும் வைத்துக்கொள்ள போவதில்லை என சொல்லியிருந்தேன். அதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். எனவே யார் எது சொன்னாலும் நம்பாதீர்கள். எல்லாம் வல்ல இறைவனில் அருளால் நாம் நினைத்ததை நிச்சயம் அடைய முடியும்” என்று பேசி கூட்டணி கணக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். 

இந்த கடுப்பில் தான் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “நாங்கள் த.வெ.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையே நடத்தவில்லை. ஆதவ் அர்ஜூனா யார் என்றே எனக்கு தெரியாது” என்றெல்லாம் கடுப்பான கருத்தையும் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கைகூடாவிட்டாலும் பரவாயில்லை, பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என த.வெ.க வில் இருவர் கூட்டணியாக செயல்பட்ட ஆதவ்- ஜான் அணி அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். இதனால், பா.ஜ.க தரப்பு இந்த இருவர் மீது கடும் டென்சனில் இருக்கிறதாம்.!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *