Sorting by

×

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், `குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்து, தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தூத்துக்குடியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்டாலின் – கனிமொழி

இந்த விழாவில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழர்களின் பண்பாடு மற்றும் நாகரிகத்தின் அடையாளமாகத் திகழும் கீழடி மண்ணிலிருந்து நாளை எனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். இன்று தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்து, ஒரு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தூத்துக்குடியைப் பொறுத்தவரை அவர் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்ட வேட்பாளர் என்றே நான் கருதுகிறேன்.

தி.மு.க ஆட்சி பெண்களைச் சமூகத்தில் உயர்த்துவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழில் முதலீடுகளைக் கொண்டு வந்து, இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை விட தி.மு.க-வின் அறிக்கையே மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தி.மு.க எதைக் கூறினாலும் அதைச் செய்யும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதே இதற்குக் காரணம்.

பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி
பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி

ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்பின்போது சிறு சலசலப்புகள் ஏற்பட்டது உண்மைதான். புதிய வேட்பாளர்களை அறிவிக்கும் போது சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் நாம் அனைவரும் ஒரு கொள்கைக்காக ஒன்றிணைந்தவர்கள். அந்த மனத்தாங்கல்களை மறந்து, வெற்றியை நோக்கி அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தி.மு.க அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார். ஆனால் அவர் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லட்டும்.

தமிழ்நாட்டை ஒப்பிடும்போது பிறமாநில குற்றங்கள் அதிகமா குறைவா? குறிப்பாக தேசிய அளவிலான குற்றப் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விடத் தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

அதற்காக குற்றங்கள் நடக்கலாம் என்பது பொருளல்ல. அப்படியே ஒரு குற்றம் நடந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி பெற்றுத் தரும் ஆட்சியாகவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரும் ஆட்சியாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி திகழ்கிறது. ஆனால் குற்றவாளிகளைக் காப்பாற்றுபவர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். விரைவில் மீண்டும் தி.மு.க ஆட்சி அமையும். மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்” என உறுதியளித்தார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *