Sorting by

×

புது தில்லி: தனக்கு ரூ.3 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். இதையொட்டி, அவா் சமா்ப்பித்த தோ்தல் பிரமாணப் பத்திரத்தில், தனக்கு ரூ.3.02 கோடி சொத்துகள் உள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

ஜனநாயக சீா்திருத்த சங்கத் தரவுகளின்படி, பிரதமா் மோடிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.1.66 கோடிக்கு சொத்துகள் இருந்தன. இது 2019-ஆம் ஆண்டு ரூ.2.51 கோடியாகவும், 2024-இல் ரூ.3.02 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இதில் அவரின் அசையும், அசையா சொத்துகள் மற்றும் முதலீடுகள் அடங்கும்.

தற்போது பிரதமா் மோடியிடம் ரூ.2.67 லட்சம் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் உள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டில் தேசிய சேமிப்புகள் பத்திரங்களில் அவா் ரூ.7.61 லட்சம் முதலீடு செய்திருந்தாா். இது தற்போது ரூ.9.12 லட்சமாக அதிகரித்துள்ளது. அவரின் பெயரில் வங்கியில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.2.85 கோடி உள்ளது. அவருக்குச் சொந்தமாக காா், வீடு, நிலம், பங்குகள் எதுவும் இல்லை. ரொக்கமாக ரூ.52,920 வைத்துள்ளாா்.

கல்வித் தகுதி: கடந்த 1978-ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பு, குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்ததாக தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். அரசிடம் இருந்து பெறும் வருமானம், வங்கியில் இருந்து கிடைக்கும் வட்டி ஆகியவற்றை தனது வருவாய் ஆதாரமாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது மனைவியின் பெயா் ஜஷோதாபென் என்று குறிப்பிட்டதை தவிர, அவரைப் பற்றி வேறு எந்த விவரத்தையும் பிரதமா் மோடி தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *