Sorting by

×

ஸ்லோவாகியா பிரதம அமைச்சர் ராபர்ட் ஃபிகோ துப்பாக்கிச்சூட்டால் படுகாயமடைந்த நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து இல்லையெனினும் உடல்நிலை இன்னும் மோசமாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கலினாக் தெரிவித்துள்ளார்.

துணை பிரதமராகவும் பதவி வகிக்கிற கலினாக், பிரதமர் ஃபிகோ மீது நான்கு குண்டுகள் பாய்ந்ததாகவும் அதனால் அவருக்கு பலத்த அடி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

அவரின் நிலையை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் இந்த இரவு மோசமான கட்டமாக இருக்கும் எனவும் கலினாக் குறிப்பிட்டார்.

முன்னதாக 5 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை பிரதமருக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் அறுவை சிகிச்சையில் இரு குழு மருத்துவர்கள் பங்கு வகித்தனர்.

ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ

ஹாண்ட்லோவா நகரில் மக்களை சந்தித்து பேசிய பிரதமர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நான்கு முறை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

அவர் 71 வயதான முன்னாள் தனியார் பாதுகாப்பு சேவை அதிகாரி எனவும் அவரது இந்த நடவடிக்கை தெளிவான அரசியல் காரணத்துக்காக மேற்கொள்ளப்பட்டது எனவும் உள்துறை அமைச்சர் மாடஸ் சுதாஜ் எஸ்டாக் தெரிவித்தார்.

இடதுசார்புடைய பிரதமரான ராபர்ட் பிகோ ரஷிய ஆதரவாளராகவும் அறியப்படுகிறார். எதிர்வரும் ஐரோப்பிய தேர்தலில் இது தாக்கத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *