Sorting by

×

பிரதமர் மோடி விருந்தை புறக்கணித்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்ரீலேகா – அதிருப்திக்கு காரணம் என்ன?

கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமை பெற்றவர் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஸ்ரீலேகா. அவர் பா.ஜ.க-வில் இணைந்து திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். கேரள உள்ளாட்சி தேர்தலின்போது திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஸ்ரீலேகா முன்னிறுத்தப்பட்ட நிலையில், பா.ஜ.க பெரும்பான்மை பெற்றபிறகு வி.வி.ராஜேஷ் மேயராக்கப்பட்டார். இதனால் ஸ்ரீலேகா அதிருப்தியில் இருந்தார்.

கட்சியில் சேர்ந்த சமயத்திலும், திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டபோதும் அவரை கொண்டாடினார்கள். அதன்பிறகு ஸ்ரீலேகாவை கண்டுகொள்ளவில்லை, அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தி ஸ்ரீலேகாவின் செயல்பாட்டிலும் வெளிப்பட்டு வருகிறது.

அதே சமயம் கேரளாவில் முதன் முதலாக ஒரு மாநகராட்சியை, அதிலும் தலைநகரை கைப்பற்றிய பா.ஜ.க-வை டெல்லி தலைமை கொண்டாடி வருகிறது. மேலும், திருவனந்தபுரம் மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்களை டெல்லிக்கு அழைத்து விருந்துகொடுக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக கேரளா எக்ஸ்பிரஸில் மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்களுக்கு டெல்லி ரயில் நிலையத்தில் பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சென்ற திருவனந்தபுரம் மேயர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு

இன்று பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த விருந்தில் கலந்துகொள்ள கவுன்சிலர் ஸ்ரீலேகா-வுக்கு அழைப்பு விடுத்தும் அவர் டெல்லிக்கு செல்லவில்லை. பா.ஜ.க தலைமை மீது அதிருப்தியில் இருப்பதால்தான் பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளாமல் ஸ்ரீலேகா புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாயின.

மேலும், வரும் சட்டசபை தேர்தலில் ஸ்ரீலேகா போட்டியிடபோவதில்லை என அறிவித்துள்ளதால் அவர் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி விருந்தில் கலந்துகொள்ளாமல் இருந்தால் தனது எதிர்ப்பு பிரதமர் மோடிக்கு தெரியவரும், அதன்மூலம்.தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என அவர் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை என ஸ்ரீலேகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்து ஸ்ரீலேகா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், “நான் டெல்லி செல்லாதது குறித்து விவாதம் எழுந்துள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றிய உற்சாகத்தில் இருக்கும் இந்த சமயத்தில் டெல்லியில் இருந்து கவுன்சிலர்களுக்கு அழைப்பு வந்தது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைத்தார்கள். வயது முதிர்வு காரணமாக ரயிலில் பயணம் செய்வதில் எனக்கு சிரமம் உள்ளது என நான் கூறினேன். அப்படியானால் விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்வதாக என்னிடம் தெரிவித்தார்கள். எனக்காக கட்சி எதற்கு வீணாக பணம் செலவு செய்ய வேண்டும் என நான் நினைத்தேன். என்னால் அதிக பணம் செலவு ஆகக்கூடாது என நான் நினைத்துதான் போகவில்லை. எனது தேர்தலின்போதுகூட நான் அதிகமாக பணம் செலவு செய்யவில்லை.

பா.ஜ.க கவுன்சிலரும் முன்னாள் டி.ஜி.பியுமான ஸ்ரீலேகா ஐ.பி.எஸ்

அதுமட்டும் அல்லாது தனிப்பட்ட முறையிலும் சில காரணங்கள் உள்ளன. அம்மாவுக்கு 94 வயது ஆகிறது, அவரை உடனிருந்து கவனிக்க வேண்டும். பணியாளர் விடுப்பில் உள்ளதால் கடைக்கு பொருட்கள் வாங்க செல்வது போன்ற வேலைகளை நான்தான் செல்ல வேண்டும். அதுமட்டும் அல்லாது கவுன்சிலர் பணியையும் நான் கவனிக்க வேண்டும் என்பதுபோன்ற காரணங்களால் நான் டெல்லிக்கு செல்லவில்லை.

ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கையை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். அதனால்தான் ஒருவர் ஒரு தேர்தலில் போட்டியிட்டால் அடுத்த 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற கொள்கையை கொண்டுள்ளேன். அதனால்தான் கேரளாவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முடிவுசெய்துள்ளேன். எனவே இதை ஒரு விவாதமாக மாற்ற யாரும் முயலவேண்டாம்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *