தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கும் குறைவான தொகையை யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை வரும் மே மாத இறுதிக்குள் கொண்டுவரவிருப்பதாக மத்திய தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதியிலிருந்து, தொழிலாளர்கள் அவசரத் தேவைக்காக பணம் எடுக்கும் நடைமுறையை எளிமையாக்கும் வகையில் யுபிஐ வசதியை அறிமுகப்படுத்தவிருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை செயலர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான என்பிசிஐ விடுத்திருக்கும் பரிந்துரைக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
வரும் மே அல்லது ஜூன் மாத இறுதிக்குள், வருங்கால வைப்பு நிதி வைத்திருக்கும் தொழிலாளர்கள், தங்களது பிஎஃப் தொகையிலிருந்து ரூ.1 லட்சத்துக்குக் குறைவான தொகையை யுபிஐ வசதி அல்லது ஏடிஎம் வசதி மூலம் எடுக்கும் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதையும் யுபிஐ மூலமாகவே பார்த்துக் கொள்ளலாம் என்றும், தங்களுக்குத் தேவையான தொகையை விரும்பும் வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.
இதுநாள்வரை, பிஎஃப் தொகை அவசரத் தேவைக்காக எடுக்கும் வசதியைப் பெற தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். ஆனால்,இனி அந்த நிலை மாறும் என்றும், தேவையான தொகையை மிக எளிதாகவே பெற முடியும் என்பதால் தொழிலாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இது மாறியிருக்கிறது.
பிஎஃப் தொகையை தொழிலாளர்கள் பெறுவதற்கு விண்ணப்பித்தால் 3 நாள்களுக்குள் அந்த நடைமுறை நிறைவடைகிறது என்றும், மொத்தத் தொகையில் 95 சதவீதம் வரை ரொக்கமாகக் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் கூடுதல் தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை, பிஎஃப் தொகையை தொழிலாளர்கள் யுபிஐ அல்லது வங்கி மூலம் பெற முடியாது என்ற நிலையில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் ஒரு மணி நேரத்துக்குள் தொழிலாளர்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
