Sorting by

×

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. என்.டி.ஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டதுடன், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., ல.ஜ.க கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் காங்கிரஸ் – தி.மு.கவில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.

இன்று காலையில் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க ஆலோசனை செய்து கொண்டிருக்கும்போதே, `30 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது’ என்று தன்னுடைய முகநூலில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சங்கர்.

எம்.பி வைத்திலிங்கம் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அதையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து அவர்களுக்கு `ஏ’ மற்றும் `பி’ படிவங்களை வழங்கினார், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. அதேசமயம் அந்தப் படிவம் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு வழங்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சி தயார் செய்திருந்த வேட்பாளர் பட்டியலிலும் நாராயணசாமியின் பெயர் இல்லை. அதையடுத்து, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் பரவியது. அதில் கோபமடைந்த நாராயணசாமியின் ஆதரவாளர்கள், வைத்திலிங்கத்தின் வீட்டை முற்றுகையிட்டனர்.

அப்போது, வைத்திலிங்கத்துக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினார்கள். `எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தின் காரணமாகவே, நாராயணசாமிக்கு போட்டியிடும் வாய்ப்பை மறுத்திருக்கிறீர்கள்’ என்று குற்றம் சுமத்தினர். அதேசமயம் இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநிலத் தலைவர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள், “தேர்தலில் போட்டியிடாமல் முதல்வரான நாராயணசாமி, 2016-ல் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் மூலம் தன்னுடைய முதல்வர் பதவியை மட்டும்தான் அவர் காப்பாற்றிக் கொண்டாரே தவிர, அந்த தொகுதிக்கு எதையும் செய்யவில்லை.

நாராயணசாமி ஆதரவாளர்கள்

அதைக் கூட விட்டுவிடலாம்… ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில், அவரை முதலமைச்சராக்கிய நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடாமல் தவிர்த்தார். அதன்பிறகு தொகுதிப் பக்கம் போகாத நாராயணசாமி, இப்போது `நான்தான் முதல்வர் வேட்பாளர்’ என்று அந்த தொகுதியில் சுற்றி வருகிறார்.

ஆனால் நெல்லித்தோப்பு மக்கள் இவரை நம்புவார்களா ? அதனால்தான் அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. அது எங்கள் அகில இந்திய தேசிய தலைமை எடுத்த முடிவு. அதில் கட்சியின் மாநிலத் தலைவர் என்ன செய்ய முடியும்?” என்றனர். அதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கிளம்பிய வைத்திலிங்கத்தை மறித்து, ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் நாராயணசாமியின் ஆதரவாளர்கள்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *