உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், இந்த வரிக்குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடி விலைக் குறைப்பாக கிடைக்காது.
கலால் வரி குறைப்பு தொடர்பாக நேற்று (26-ம் தேதி) வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான கூடுதல் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த விளைவாக, இரண்டு எரிபொருட்கள் மீதான வரிகளிலும் தலா ரூ.10 குறைக்கப்பட்டிருக்கிறது.

ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான மோதலால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 149 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. ஏற்கெனவே எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் கடந்த பல வாரங்களாக இந்த விலை உயர்வு அழுத்தத்தைத் தாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தனியார் எரிபொருள் நிறுவனமான ‘நயாரா எனர்ஜி’, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3-ம் உயர்த்தியது.
எனவே, எண்ணெய் நிறுவங்களின் சுமையை குறைக்கும் வகையில் தற்போதைய வரிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கச்சா எண்ணெய் உயர்வால் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவை ஈடுகட்டி, மேலும் விலை உயராமல் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
எரிபொருள் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரித்து பொதுமக்களின் கோபத்தைத் தூண்டும். போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பெட்ரோல் விலை நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். இது அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தலில் எதிரொலிக்கும் சூழல் நிலவும் என்பதால் இந்த வரிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
