Sorting by

×

மத்திய ஆசியாவில் நடந்துவரும் போரால், பல்வேறு நாடுகளில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஈரான், அமெரிக்கா – இஸ்ரேல் போர் விளைவால் எரிசக்தி தட்டுப்பாடில் தொடங்கி விலைவாசி உயர்வு வரை பொதுமக்களும் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி, நேற்று (ஏப்ரல் 1), பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) சிறப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், தொடர்ந்து நடைபெற்று வரும் மேற்கு ஆசிய மோதலின் பின்னணியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் முன்னெடுப்புகள் குறித்த விவாதமும், பெட்ரோலியப் பொருட்கள், குறிப்பாக LNG மற்றும் LPG ஆகியவற்றின் விநியோகத்தையும், போதுமான மின்சார இருப்பையும் உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இது தொடர்பாக அமைச்சரவைச் செயலாளர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “பெட்ரோலியப் பொருட்கள், குறிப்பாக LNG மற்றும் LPG ஆகியவற்றின் விநியோகத்தையும், போதுமான மின்சார இருப்பையும் உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைச் செயலாளர் விளக்கமளித்தார்.

பல்வேறு நாடுகளிலிருந்து வரும் புதிய வரத்துகள் மூலம், LPG-யைப் பெறுவதற்கான மூலங்கள் பல்வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. LNG பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்டு வருவதாகவும், உள்நாட்டு நுகர்வோருக்கான LPG விலைகள் நெருக்கடிக்கு முந்தைய நிலையிலேயே மாற்றமின்றித் தொடர்வதாகவும் அமைச்சரவைச் செயலாளர் மோடியிடம் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு முன்னெடுப்புகள் குறித்தும் கேட்டரிந்த பிரதமர் மோடி, மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பையும் ஆய்வு செய்தார். நாட்டில் உரங்களின் இருப்பு குறித்தும், பருவ மழை, குளிர் பருவங்களில் அவற்றின் இருப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நடந்துவரும் மோதலின் தாக்கத்திலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்குச் சரியான தகவல்கள் தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யுமாறும் பிரதமர் வலியுறுத்தினார். தற்போது நிலவும் உலகளாவிய சூழலால் பாதிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் பல்வேறு துறைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் மோடி உத்தரவிட்டார்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *