Sorting by

×

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோரும், பிற நாடுகளில் இருந்து இந்தியா வருவோரும் ’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் மஞ்சல் காய்ச்சல் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இத்தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாள்கள் கழித்தே மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும், அதேபோல, மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழையவும் அனுமதிக்கப்படுவர். இதற்காக விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது.

மஞ்சள் காய்ச்சல் விவரங்கள், தடுப்பூசி பற்றிய தகவல்களை htps://ihpoe.mohfw.gov.in/index.php இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி பற்றிய தகவல்களை அறிய

தடுப்பூசி மையங்களில் கீழ்காணும் ஆவணங்களை காண்பித்து பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்

கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்)

சுய விவரங்கள் அடங்கிய தொகுப்பு

மருத்துவ விவரங்கள்( ஏதேனும் இருப்பின்)

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் பன்னாட்டு தடுப்பூசி மையத்தில் அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 10 – 12 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படும். இதற்காக ரூ. 300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.kipmr.org.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். நேரடியாகச் சென்றும் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை இராஜாஜி சாலையில் உள்ள துறைமுக சுகாதார நிறுவனத்தில் அனைத்து திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் காலை 9 – 12 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படும். இதற்காக ரூ. 300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. porthealthofficechennai@gmail.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். நேரடியாகச் சென்றும் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள துறைமுக சுகாதார அதிகாரி அலுவலகத்தில் அனைத்து செவ்வாய்க்கிழமைகளில் காலை 11 – 1 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படும். இதற்காக ரூ. 300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கு நேரடியாகச் சென்று மட்டுமே பதிவு செய்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 3 இடங்களை தவிர்த்து வேறு எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *