திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28ஆம் தேதி அவர் கொலைசெய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் தனிப்படைக் காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையில் இது காவல் மரணம்தான் எனவும், டி.எஸ்.பி அழைத்ததாலேயே இந்தப் பிரச்னை தீவிரமாகியுள்ளது, வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது என சிபிஐ, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்திருந்தது.
மேலும் நகை திருட்டு என்ற புகாரில் உண்மையில்லை எனவும் சிபிஐ தெரிவித்திருந்தது, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது

இதையடுத்து பொய் புகார் அளித்தது தொடர்பாக நிகிதா மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய டி.எஸ்.பி சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.எஸ்.ஐ சிவகுமார், ஏட்டு இளையராஜா ஆகிய நால்வர் மீதும் குற்றச் சதி, தவறாக சிறை வைத்தல், ஆதாரம் மறைத்தல் / பொய் தகவல் கொடுத்தல், அரசு மற்றும் நீதிமன்ற ஆவணங்களைப் போலியாக்குதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் கூடுதலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதோடு, வரும் 25 ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
