“ரொம்ப நாள் ஆசைய்யா… ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல… நல்லகண்ணு அய்யாவே தன்னோட உடலை தானம் செஞ்சுட்டாரு… இதுக்கு மேல காத்திருக்கக் கூடாதுன்னு போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்…” – அற்புதம் அம்மாளின் வார்த்தைகளில் அத்தனை திருப்தி.
அற்புதம் அம்மாளும் பேரறிவாளனும் இன்று (மார்ச் 4) சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன் உடலைத் தானம் செய்த பிறகு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது.
“எப்படியிருந்தாலும் மண்ணுக்குப் போற உடம்பு… மருத்துவம் படிக்கிற நம்ம பிள்ளைகளோட ஆராய்ச்சிக்கு தேவையில பாதிகூட உடல்கள் கிடைக்கிறதில்லைன்னு சொல்றாங்க. அவங்களுக்கு உதவட்டுமே… ரொம்பநாளா நினைக்கிறேன். ஆனா அதுக்கான நடைமுறைகள் அவ்வளவு எளிதா இல்லை. இன்னைக்கு நிம்மதியா முடிச்சுட்டேன். அறிவுக்கிட்ட சொன்னப்போ, கொஞ்சம் யோசிச்சான்… ‘போடுப்பா கையெழுத்தைன்னு சொல்லிட்டேன். என் உடலைத் தானம் செய்யப்போனா கூடவே அவனும் செஞ்சிட்டான்…

சாங்கியம், சடங்குகள் எல்லாம் வழக்கமா நாங்க செய்றது இல்லை. அதனால முழு மனதோட இந்த முடிவை எடுத்தோம்… எனக்கு அவனும் அவனுக்கு நானும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுக்கிட்டோம்…” என்கிறார் அற்புதம் அம்மாள்.
“அம்மா தொடர்ச்சியா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கூட இருக்கவங்ககிட்டயும் நிறைய பார்க்கிறோம். சமீபத்துல என் நெருக்கமான நண்பர், ‘கீற்று’ ரமேஷ் மனைவி காலமானபோது அவர் ரொம்ப உறுதியா நின்னு உடல்தானம் செஞ்சார். இத்தனைக்கும் அவங்க இறக்கும்போது 43 வயதுதான். தஞ்சாவூர்ல ஒரு நண்பர் தன் அப்பாவோட உடலை தானம் செஞ்சார். ஒரு தம்பி தன் பிள்ளையோட கண்ணை தானம் செஞ்சார். இது எல்லாத்திலயும் கூட நின்னேன். எனக்கு இதெல்லாம் பெரிய தாக்கத்தை உருவாச்சு. நல்லகண்ணு அய்யாவோட உடலை தானம் செஞ்ச பிறகு அம்மா ரொம்ப உறுதியா நின்னாங்க. கூடவே நானும் பதிவு செஞ்சுக்கிட்டேன்… இது பெரிய விஷயமில்லை. ஆனா, நிறைய பேர் செய்ய முன்வரணும்…” என்கிறார் பேரறிவாளன்.

உறுப்பு தானம் பலரின் உயிரை மீட்கும். உடல் தானம், மருத்துவத்துறை மாணவர்கள் கற்றுத்தேர்ந்து மனித குலத்தைக் காக்க உதவும்! தாயும் பிள்ளையும் ஒருசேர உடல் தானத்துக்குப் பதிவு செய்திருப்பது நல்லதொரு முன்னுதாரணம்… வாழ்த்துகள்!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
