Sorting by

×

அமெரிக்க – இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை ஈரான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹார்மூஸ் ஜலசந்தியும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், எரிசக்தித் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எரிசக்தி தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்துவந்த இந்தியா பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால்
ரந்தீர் ஜெய்ஸ்வால்

அப்போது, “இந்திய மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரஷ்யாவிடமிருந்தும் எல்.பி.ஜி (LPG) வாங்க அரசு தயாராக இருக்கிறது. தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், எரிசக்தி விநியோகத்திற்கான ஆதாரங்களை ஒரு குறிப்பிட்ட நாட்டுடன் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், பரவலான இடங்களிலிருந்து இறக்குமதி செய்ய விரும்புகிறோம்.

எங்கள் மக்களின் எரிபொருள் தேவையை உறுதி செய்வதுதான் எங்களின் முதன்மையான நோக்கம். எனவே, ரஷ்யாவிடம் எரிவாயு கிடைத்தால், அங்கிருந்தும் வாங்குவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம்.

இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளுக்கு மத்தியில், அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளிடமிருந்தும் எரிசக்தி உதவி கோரி கோரிக்கைகள் வந்திருக்கின்றன.

2007-ம் ஆண்டு முதல் பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் வங்கதேசத்திற்கு இந்தியா டீசல் விநியோகம் செய்து வருகிறது. தற்போதைய நெருக்கடியிலும் அண்டை நாடுகளுக்குத் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும்.

இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன் மற்றும் இருப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த உதவிகள் மேற்கொள்ளப்படும்.

அமெரிக்கா- ஈரான்
அமெரிக்கா- ஈரான்

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசல் விழுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் சமையல் எரிவாயுவை (LPG) மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

முடிந்தவரை மாற்றுச் சமையல் முறைகளை ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். எரிவாயுத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மாநில அரசுகள் அதிரடி சோதனைகளைத் தொடங்கியுள்ளன.

அதேசமயம், எல்.பி.ஜி மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக உணவகங்கள் மற்றும் விடுதிகளில் நிலக்கரி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் தட்டுப்பாட்டை ஓரளவுக்குச் சமாளிக்க முடியும் என நம்புகிறோம்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *