தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் மற்றும் கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவிப்பு, மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து நீக்கம், தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று வந்த மர்மம் இவை எல்லாமை சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
கடம்பூர் ராஜூ
ஒரு மாநில முதல்வர் பிரதமரை சந்திக்கலாம். அதே நேரத்தில் ஸ்டாலின் – பிரதமர் மோடி சந்திப்பு என்பது 45 நிமிடம் நடந்ததாகக் கூறப்படுகிறது. 30 நிமிடங்கள் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள், தமிழகத்துக்கு வரவேண்டிய நிதிகள் குறித்து பேசியதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் தலைமைச் செயலாளரை வெளியே அனுப்பிவிட்டு ஸ்டாலின், எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியிடம் பேசி இருக்கிறார்கள் என்றால் அது அரசியலைப் பற்றியதாகத்தான் இருக்கும்.
மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டது, அவர் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவை விமர்சித்து வந்ததுகூடக் காரணமாக இருக்கலாம். அதைத்தவிர வேறு எந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்கள் அல்லது துறை ரீதியாக ஒரு பிரச்னையை எதிர்கொண்டு இருந்தால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவது இயல்பு. இவை எதுவுமே இல்லாமல் மனோ தங்கராஜ் நீக்கப்பட்டிருக்கிறார் என்றால் முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் கூட காரணமாக இருக்கலாம். இந்த மர்மத்திற்கு ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.
மனோ தங்கராஜ்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வந்தால்தான் தி.மு.கவையும் காப்பாற்ற முடியும் என்பது போலப் பேசி அவருக்கு முதலில் அமைச்சர் பதவி கொடுத்தார்கள். ஸ்டாலினால் தி.மு.கவையும் காப்பாற்ற முடியவில்லை, ஆட்சியும் கொண்டு சொல்ல முடியவில்லை என்பதைத்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி நியமனம் என தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஒருவேளை முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூட கூறலாம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட போதுதான் இன்றைய முதல்வர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின், தனது உடல்நிலை சரியாகத்தான் இருக்கிறது சைக்கிள் ஓட்டுகிறேன், ஆக்டிவாக இருக்கிறேன் என்று சொல்லி வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது வியப்பினையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தி.மு.கவின் வாரிசு அரசியலில் இப்படித்தான் நடக்கும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தி.மு.கவிற்கு துதிபாடும் வேலையை செய்து வருகிறார்.
கடம்பூர் ராஜூ
அவருடைய மக்கள் நீதி மய்யம் கட்சியை திமுகவுடன் இணைத்துவிட்ட நிலையில்தான் அவருடைய அரசியல் பயணம் இருக்கிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வாங்குவதற்காக கமல்ஹாசன் தன்னுடைய நிலையை மறந்து செயல்பட்டு வருகிறார். “உன்னால் முடியும் தம்பி, உனக்குள் இருக்கும் உன்னை நம்பி” என்று திரைப்படத்தில் பாடிய கமல்ஹாசன் , அவருக்குள் அவர் இல்லை அவர் திமுகவை நம்பி உள்ளார் என்பதையே காட்டுகிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
