Sorting by

×

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தில் 1952-ல் தொடக்கபள்ளி தொடங்கப்பட்டு, அப்பகுதி குழந்தைகளின் தொடக்கக் கல்வி தேவையைப் பூர்த்தி செய்யப்பட்டது. 2008-ம் ஆண்டு இப்பள்ளியின் கட்டடமானது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் பூங்குடி மற்றும் தோப்புத்தெரு பகுதியைச் சேர்ந்த 34 மாணவர்கள் (20 ஆண் குழந்தைகள், 13 பெண் குழந்தைகள்) கல்வி பயில்கின்றனர்.

இந்த நிலையில் இப்பள்ளியில் ஆண் மற்றும் பெண் என இரு பாலருக்கும் தனித்தனியே கழிவறைகள் இல்லாதது பற்றியும், அப்பள்ளிக் குழந்தைகளின் அசௌகரியமான மனநிலையைப் பற்றியும், “பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள்” என்ற தலைப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அன்று, விகடன் டாட்.காமில் செய்தியானது வெளியிடப்பட்டது.

பள்ளியிலுள்ள கழிப்பறை
பள்ளியிலுள்ள கழிப்பறை

இச்செய்தியானது ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, செய்தி வெளியான ஒரு‌ வாரத்திற்குள் ஆண்களுக்குத் தனிக் கழிவறை அமைக்க ஆட்சியரால் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை புதிய கழிவறை அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல், மாணவர்கள் மிகுந்த அசௌகரியத்துடன் இருக்கின்றனர்.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் நம்மிடம் பேசுகையில், “எங்க புள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடத்துல ஆம்பள புள்ளைக்கும் பொம்பள புள்ளைக்கும் தனித்தனி பாத்ரூம்லா கெடையாது. ஒரே பாத்ரூம் தான். இதனால எங்க புள்ளைங்க நெறைய சிரமப் படுறாங்கன்னு விகடன்லகூட செய்தி போட்டாங்க. அந்தச் செய்தியைப் பாத்துட்டு, கலெக்டரும் நிதி ஒதுக்கிட்டாங்க, சீக்கிரம் பாத்ரூம் கட்டிடு வாங்கன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தோம். டெய்லியும் வீட்ல வந்து பொளம்புற பிள்ளைங்க கிட்டக்கூடச் சொன்னோம். சீக்கிரம் பாத்ரூம் கட்டிடுவாங்க, கலெக்டர் பணம் கொடுத்துட்டாங்கன்னு.

பசங்களும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஆனா, கலெக்டர் ஒதுக்குன நிதி, நிதியாவே இருக்கு நாளு மாசமா. அந்த நிதியை என்ன பண்ணுனாங்கன்னு தெரியல. ஒன்னும் கட்ட ஆரம்பிச்சப்பாடு இல்ல. குழந்தைங்க ரொம்ப சிரமமப்படுறாங்க. அதனால அதிகாரிங்க உடனடியா கலெக்டர் ஒதுக்கின நிதியில கழிவறை கட்டிக் கொடுக்கணும்” என்றனர்.

இது குறித்து, கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சனிடம் பேசியபோது, “நான் கட்டி முடித்து இருப்பார்கள் என்று நினைத்தேன். இன்னும் கட்ட வில்லையா?” என அதிர்ச்சியுடன் கேட்ட வண்ணமே… இதர தகவல்களை அறிய உதவிப்பொறியாளரை அழைக்குமாறு கூறினார்.

தொடர்ந்து உதவிப் பொறியாளர் பூவராகவன் கூறியதாவது, “டெண்டர் விடப்பட்ட நிலையில், அடுத்த வாரத்தில் கழிவறை கட்டும் பணியானது தொடங்கும்” எனக் கூறினார்.

அரசு விரைந்து துறை‌ சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு, புதிய கழிவறையை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *