‘தி.மு.க-வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னார், ஆனால் நான் பெற மறுத்துவிட்டேன்’ என திருமா பேசியிருப்பது வி.சி.க-வினர் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து விரிவாக விசாரித்தோம்.

வி.சி.க போட்டியிடும் 8 தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன். இச்சூழலில் மார்ச் 6-ம் தேதி காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் ஜோதிமணி இளையபெருமாளை ஆதரித்து பிரசாரம், செயல்வீரர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் வேட்பாளர்கள் தேர்வு, தொகுதி பங்கீடு குறித்துப் பேசினார். அப்போது “தொகுதி பங்கீட்டின்போது முதல்வர் ஸ்டாலின் இடத்திலிருந்து நான் யோசித்தேன். தொகுதிகளை வற்புறுத்தி பெறுவதெல்லாம் எனக்கு வராது. சொல்லப்போனால், 8 என்ற எண்ணிக்கையே முன்மொழிந்ததே நான்தான்.
8 தொகுதிகள் கொடுங்கள்.. உடனே கையெழுத்து போடுகிறேன் எனச் சொன்னேன். அண்ணன் ஸ்டாலின் 7 தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் தருவதாகச் சொன்னார். ஆனால், ராஜ்ய சபா எம்.பி சீட்டை பெற மறுத்துவிட்டேன். சென்றமுறையே 6 தொகுதிகள்தான் கிடைத்தது. ஆகையால் 8 தொகுதிகள் கொடுத்துவிடுங்கள் என்றேன்” எனப் பேசினார்.

திருமாவின் இந்த பேச்சு வி.சி.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இரட்டை இலக்க தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும்’ என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்ட தீர்மானம். கட்சிக்குள் இரட்டை இலக்கத் தொகுதிகள் வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு தி.மு.க-விடம் 8 தொகுதிகள் போதும் என தலைவர் சொன்னது ஏன்… ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக தே.மு.தி.க தனது கூட்டணியையே மாற்றிக் கொண்டு வந்திருக்கிறது. அப்படியிருக்கையில் கொடுத்த சீட்டை தலைவர் ஏன் மறுக்க வேண்டும்” எனப் புலம்புகிறார்கள்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
