Sorting by

×

பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் நாசிக், கல்யான் மற்றும் மும்பையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முதலில் நாசிக் மற்றும் கல்யான் போன்ற பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் நேற்று மும்பை காட்கோபர் பகுதியில் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்தினார். இதற்காக காட்கோபரில் மெட்ரோ ரயில் சேவை மற்றும் பஸ் சேவை நிறுத்தப்பட்டது.

பிரதான சாலையான எல்.பி.எஸ் மார்க் சாலை பிற்பகல் 2 மணியில் இருந்து மூடப்பட்டது. பிரதமருடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் ரோடுஷோவில் பங்கேற்றனர். சாலையில் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல மணி நேரம் காத்திருந்து பிரதமர் மோடியை பார்த்தனர். ஆட்டோ மற்றும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கல்யாண் பொதுக்கூட்டத்தில் பேசியபோது நரேந்திரமோடி கூறியதாவது, “காங்கிரஸ் இந்து முஸ்லிம் பிரச்னையை உருவாக்க முயற்சிக்கிறது. மத அடிப்படையில் காங்கிரஸ் நாட்டை பிரிக்க முயற்சி செய்வதை தான் நான் வெளிக்கொண்டு வந்தேன். அவர்களது திட்டத்தை நான் வெளியில் சொல்லக்கூடாதா?. நான் எனது பெயரைப்பற்றி கவலைப்பட்டு இருந்தால் இப்பிரசனை பற்றி பேசி இருக்கமாட்டேன். மத அடிப்படையில் எனது நாடு பிரிய அனுமதிக்க மாட்டேன். அவர்கள் மத அடிப்படையில் ஒரு நாட்டை உருவாக்கினார்கள்.

அப்போது காங்கிரஸ் கட்சியால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது இந்து பட்ஜெட், இதை முஸ்லிம் பட்ஜெட் என்று சொல்வார்கள். நாட்டில் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு தனி பட்ஜெட் போட முடியுமா? மத அடிப்படையில் பணம் விநியோகம் செய்ய காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. அதோடு பட்ஜெட்டில் 15 சதவீத தொகையை சிறுபான்மை சமுதாயத்திற்கு செலவிடும்படி காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. மத அடிப்படையில் பட்ஜெட் எவ்வளவு ஆபத்தானது என்று நினைத்து பாருங்கள்.

மன்மோகன் சிங் ஆட்சியில் இதனை கொண்டு வர முயன்றார்கள். பா.ஜ.க எதிர்ப்பு காரணமாக அதனை கைவிட்டார்கள். இப்போது மீண்டும் மத அடிப்படையில் பட்ஜெட் தாக்கல் செய்ய காங்கிரஸ் நினைக்கிறது. அதனை நான் ஒருபோதும் விடமாட்டேன். காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்திருக்கும் போலி சிவசேனா(உத்தவ்) இவ்விவகாரத்தில் அமைதி காக்கிறது. பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் நற்சான்று கொடுத்துள்ளது. தேர்தலுக்கு பிறகு போலி சிவசேனா காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்துவிடும்.

அதன் பிறகு அக்கட்சி இல்லாமல் போய்விடும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மத அடிப்பையில் இட ஒதுக்கீடு வழங்க அம்பேத்கர் விரும்பவில்லை. தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாத அளவுக்கு காங்கிரஸ் தோல்வி அடையும். இது மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவருக்கு(சரத் பவார்) தெரியும். எனவேதான் சிறிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியில் இணையவேண்டும் என்று சொல்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து தான் கிடைக்கும்” என்று தெரிவித்தார். மும்பையில் வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *