14 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான மும்பை காட்கோபர் விளம்பரப் பலகை விபத்தில் தேடப்பட்டு வரும் விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாவேஷ் பிண்டே மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் பாலியல் வழக்கும் அடக்கம்.
தலைமறைவாக உள்ள பாவேஷின் அலைபேசி அணைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈகோ விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாவேஷ் பிண்டே, 2009 சட்டப்பேரவை தேர்தலில் முலுந்த் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர் என்றும் அப்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் 23 வழக்குகள் மும்பை மாநகராட்சி சட்டவிதிகள் மீறல் மற்றும் பண மோசடி வழக்குகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேடப்படும் பாவேஷ் பிண்டே
இந்தாண்டு ஜனவரியில் அவர் மீது முலுந்த் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றும் பதியப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே மற்றும் மும்பை மாநகர நிர்வாகத்திடம் இருந்து ஏராளமான ஒப்பந்தங்களை இவர் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரு நிர்வாகங்களின் விதிகளையும் பல முறை இவர் மீறியுள்ளார். அவரது நிறுவனம், சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட்டிய குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியுள்ளது.
மும்பை: விளம்பரப் பலகை அகற்ற ஓராண்டுக்கு முன்பே மனு! ஏன் நடவடிக்கை இல்லை?
காட்கோபரில் நிறுவப்பட்ட விளம்பர பலகை 120 அடிக்கு 120 அடி உயரமும் அகலமும் கொண்டது. மும்பை மாநகரட்சியின் அனுமதிக்கப்பட்ட விளம்பர பலகை அளவு என்பது 40 அடிக்கு 40 அடி மட்டுமே.
இது தொடர்பாக வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் மும்பையில் சட்டத்திற்கு புறம்பாக நிறுவப்பட்ட விளம்பர பலகைகள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
