Sorting by

×

திமுக கூட்டணியில் நிலவி வரும் இழுபறிக்கு இன்னமும் ஒரு முடிவு கிடைக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று காலை கூட்டணி ஒப்பந்தத்தை முடித்த திமுக, இன்றே விசிக மற்றும் சி.பி.எம் உடனும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்பட்டது.

CPI
CPI

ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ‘அதிக சீட்டுகள் வேண்டும்’ என்கிற தங்களின் நிலைப்பாட்டி உறுதியாக நிற்பதாலும், விசிக திடீரென முதல்வருடனான சந்திப்பை தவிர்த்ததாலும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தலைவலியில் தவிக்கிறது அறிவாலயம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று திமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, ‘அதிக தொகுதிகளில் நிற்க வேண்டும் என்கிற எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்’ என பெ.சண்முகம் பேசியிருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருவருக்கும் ஒரே எண்ணிக்கையிலான தொகுதியை ஒதுக்கும் முடிவிலேயே திமுக இருந்தது. இதனால் இரு கட்சியினரும் ஒரே நாளில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிபிஐ இன்று காலை திமுகவுடன் 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Shanmugam
Shanmugam

சி.பி.எம் க்கும் 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க திமுக முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து சி.பி.எம் இன் மாநில நிர்வாகக் குழு இன்று கூடியது. அந்தக் கூட்டத்தில் அதிக தொகுதிகளை கேட்டுப் பெறும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க சி.பி.எம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

அதன்படி, ‘6 சீட்டுக்கு மேல் என்றால் அறிவாலயத்துக்கு பேச வருகிறோம். இல்லையென்றால் எங்களை அழைக்காதீர்கள்.’ என கறாராக ஒரு செய்தியை சி.பி.எம் திமுக தரப்பு கூறிவிட்டதாகவும் தோழர்கள் வட்டத்தில் கிசுகிசுக்கின்றனர்.

அதிக தொகுதிகளை கொடுக்க மனமில்லாத திமுக, விட்டுப்பிடிக்கும் மைண்ட் செட்டுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

சி.பி.எம் போல விசிக முரண்டு பிடிக்கவில்லை. கடந்த முறை போட்டியிட்டதிலிருந்து சீட்டுகள் குறையாது என விசிக தரப்புக்கு திமுக உத்தரவாதமும் கொடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து விசிக இன்று மாலை கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக தகவல் வெளியானது. விசிக தரப்பிலும் மாலை 5:30 மணியளவில் அறிவாலயத்தில் முதல்வரை சந்திக்க நேரம் வாங்கப்பட்டிருந்தது.

திருமாவளவன்
திருமாவளவன்

ஆனால், திடீரென மாலை 5:10 மணிக்கு முதல்வரை சந்திக்க வரவில்லை என விசிக தரப்பில் சொல்லப்பட்டதாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர். ‘சீட் குறைப்பு இல்லை’ என்கிற போதும் கடைசி நிமிடத்தில் விசிக முதல்வரின் அப்பாய்ண்மெண்டை கேன்சல் செய்ததில் அறிவாலயமே குழம்பி போயிருக்கிறது.

அறிவாலயத்தின் தொகுதி பங்கீடு தலைவலி என்று முடியுமோ?

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *