மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக மதிமுக வேட்பாளர் பூமிநாதன் போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக வந்திருந்த பூமிநாதனுடன் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, “இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். மதுரை தெற்கு தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பூமிநாதன் வெற்றி பெறுவார். பூமிநாதன் இந்த தொகுதி மக்களிடம் எந்த வேற்றுமையும் பாராது, நேர்மையாக நடந்து கொண்டார். இந்த தேர்தல் களத்தில் கசப்புகளுக்கு இடம் கொடுக்காமல் கண்ணியமாக பிரசாரம் செய்ய இருக்கிறோம்.

படை பட்டாளத்துடன் பிரதமர் வந்தாலும், ஆணவத்தையே சொற்களாக பிரகாசிக்கும் அமித் ஷா என யார்?, எத்தனை முறை வந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெற போவதில்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டார்களே, அதே போல மற்றவர்களின் வாகனங்களையும் சோதனையிட்டார்களா? பிரதமர் மோடி விமானத்தில் வருகிறார். அவர் வரும் போது எத்தனை ஆயிரம் கோடி பணம் கொண்டு வருகிறார் என யாருக்கு தெரியும். முதலமைச்சர் வாகனத்தை சோதனையிட்டது போல பிரதமரின் வாகனத்தையும் சோதனையிடுவார்களா? செய்யவில்லை என்றால் நயவஞ்சகத்தோடு செய்கிறார்கள் என்று தான் எடுத்து கொள்ள முடியும்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
