மக்களவைத் தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெற்று, மத்தியில் இந்தியா கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணி என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,”நரேந்திர மோடி 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க மாட்டார் என்பது மட்டுமே ஒரே உத்தரவாதம்” என்றார்.
பிரதமர் மோடியை ‘கேரண்டி பாபு’ எனக் குறிப்பிட்ட அவர், சந்தேஷ்காலி விவகாரத்தில் பாஜக பொய்யை பரப்பி மாநில பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது. மாநில பெண்களின் நன்மதிப்பைக் கெடுக்க சதி செய்கிறது. இந்தியா கூட்டணி 295 முதல் 315 இடங்களைப் பெறும், அதே நேரத்தில் பாஜக அதிகபட்சமாக 200 இடங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் என்றார்.
பயத்தினால்தான் பாஜக சிறைக்கு அனுப்பியது: கேஜரிவால் பேச்சு!
“குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப்படுவதற்கு தனது எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தி பாஜகவைத் தாக்கி பேசிய அவர்,”எங்கள் மதப் பழக்கவழக்கங்கள், உணவுப் பழக்கங்கள் என எல்லாவற்றிலும் அவர்கள் தலையிடுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல” எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், ஆளும் கட்சித் தலைவர்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேஷ்காலியின் தவறுகளை திரிணமூல் காங்கிரஸ் மறைக்க முயற்சிப்பதாக மோடி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
