சென்னை கொளத்தூரில் தவெகவின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் தவெகவில் சமீபத்தில் இணைந்த ரஜினி ரசிகர் அசோக், ஆதவ் அர்ஜூனாவை மேடையில் வைத்துக் கொண்டே ‘ரஜினியை யாரும் தவறாக பேசினால் தட்டிக் கேட்பேன்’ எனப் பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

முன்னாள் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் அசோக் பேசுகையில், ‘எனக்கு 59 வயது. 13 வயதிலிருந்து ரஜினியை ரசித்து ரசிகராகிவிட்டேன். என் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தது ரஜினிதான். எப்படி நேர்மையாக எளிமையாக வாழ வேண்டும் என்பதை என் குரு ரஜினிதான் கற்றுக்கொடுத்தார்.
ரஜினி அரசியலுக்கு வராததுக்கு கொரோனா மட்டுமே காரணம். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படிதான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை. அதன்பிறகும் நான் அரசியலில் சேவை செய்ய நினைத்தேன். அதற்காகத்தான் விஜய்யை தலைவராக ஏற்று வந்தேன். ஆதவ் ஏழ்மை நிலையிலிருந்து முன்னேறி வந்தவர். ரஜினி ரசிகர் மன்றத்தில் நாங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குகையில் மக்களுக்காக ஆதவ்வும் பணம் கொடுத்து உதவியிருக்கிறார்.

45 வருடமாக ரஜினியுடன் இருந்தவர். அவரை நான் எப்படி விட்டுக் கொடுப்பேன். ஆதவ் வேண்டுமென்றே ரஜினியை பற்றி பேசியிருந்தால் அங்கேயே மேடையில் ஏறி கேட்டிருப்பேன். அவர் வார்த்தை தவறிதான் பேசினார். ரஜினி பயந்தவர் கிடையாது. போராட்டக்குணம் மிக்கவர். ஆதவ்விடம் எனக்கு ஒரு கோரிக்கை. ரஜினி சாரை பற்றி எந்த எண்ணத்தில் பேசினீர்கள் என நீங்கள் விளக்கிவிடுங்கள். ரஜினி சாரை பற்றி யாரும் தவறாக பேசினால் நான் தட்டிக் கேட்பேன்’ என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
