Sorting by

×

தேசிய முற்போக்கு திராவிட கழகம், முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் இன்றைய ஹாட் நியூஸ் ஆக உள்ளது.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இரு துருவங்கள் கோலோச்சிய காலத்திலேயே தனக்கென தனி இடத்தை உருவாக்கி ஏகப்பட்ட ஹிட் படங்களைத் தந்தவர், தனது ரசிகர்களால் `புரட்சிக் கலைஞர்’ எனக் கொண்டாடப்பட்ட விஜயகாந்த்.

சினிமாவில் இருந்த போதே ரசிகர் மன்றங்கள் மூலம் மக்கள் பணியைச் செய்து வந்தார். சினிமா நடிகர் சங்கத்திலும் தலைவராக இருந்து இவர் திரையுலகத்துக்குச் செய்த பணிகளும் மறக்க முடியாதவை.

ஒருகட்டத்தில் தன் ரசிகர்களை அரசியல் மயப்படுத்த எண்ணியே 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை உருவாக்கினார். அப்போது தமிழகத்தில் நடந்தது ஜெ.ஜெயலலிதா தலைமையிலால அ.இ.அதிமுகவின் ஆட்சி.

Vijayakanth | விஜயகாந்த்

ண்டபம் இடிப்பு, விஜயகாந்த் கொதிப்பு!

அதிமுக ஆட்சியிலிருந்த போது கட்சி தொடங்கினாலும் கூட ஆரம்பத்தில் அதிமுகவை அவ்வளவாக விமர்சிக்கவில்லை விஜயகாந்த். மாறாக ‘மக்களுடனும் கடவுளுடனும்தான் கூட்டணி’ என அறிவித்து திமுக அதிமுக இரண்டுக்கும் எதிராக 2006-ம் ஆண்டு தனது முதல் சட்டசபைத் தேர்தலில் தனித்து களம் இறங்கினார்.

இந்த  தேர்தலில் விஜயகாந்த் மட்டும் விருத்தாசலம் தொகுதியில் வெல்ல, கட்சி 8 சதவிகிதம் தாண்டி வாக்குகள் பெற்றது.

அதிமுக ஆட்சி போய் திமுக ஆட்சிக்கு வந்து விட்ட பிறகு அடுத்த வருடமே மத்திய நெடுஞ்சாலை துறையால் சென்னை கோயம்பேட்டிலுள்ள விஜயகாந்தின் திருமண மண்டபம் மேம்பாலப் பணிக்காக இடிக்கப்பட, ’இது தான் அரசியலுக்கு வந்ததற்காக திமுக வின் எதிர்வினை என வெளிப்படையாகவே குற்றம் சுமத்தினார் விஜயகாந்த். திமுகவின் டி,ஆர். பாலு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்.  

தொடர்ந்து 2009 ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிட இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு தோல்வியே.

சட்டசபை தனி, நாடாளுமன்ற தேர்தல் தனி என எடுத்துக் கொண்டாலும், கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அப்போதே கூட்டணிக் கனவு உருவாகத் தொடங்கி விட்டது என்றே சொல்லலாம்.

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்!

அடுத்து 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல். கடந்த முறை விஜயகாந்த் வாங்கிய வாக்கு சதவிகித்தைக் கவனித்த ஜெயலலிதா இந்த முறை அவரை தன்பக்கம் இழுக்க நினைத்தார். மறைந்த சோ ராமசாமி இதற்கு உதவியதாகப் பேசப்பட்டது.

கடைசியில் முதன்முறையாக தேர்தல் களத்தில் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்து அதிமுகவுடன் சேர்ந்தது. ஜெ போட்ட கணக்கு பலிக்க இந்தத் தேர்தலில் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

ஆனால் இந்தக் கூட்டணி நீண்ட நாள் நிலைக்கவில்லை. சட்டசபையில் ஜெ – விஜயகாந்த் இடையே மோதல் உண்டாக தனக்கு வழங்கப்பட்ட காரையே வேண்டாம் என திருப்பித் தந்தார். பதிலுக்கு அதிமுகவும் சும்மா இல்லை. தேமுதிகவை உடைக்கும் வேலையை நன்றாகவே செய்தது.

சி.எம் வேட்பாளர்!

தொடர்ந்து கட்சி சந்தித்த மூன்றாவது சட்டசபைத் தேர்தல் 2016ல் வந்தது. அதிமுகவுடன் கசப்பு என்பதால் திமுக பக்கம் போகுமென்றார்கள். ஆனால் விஜயகாந்த் அந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக தன்னையே முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்.

என்ன உள் விவகாரமோ தெரியவில்லை, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன், வைகோ ஆகியோர் இவரை நம்பிச் செல்ல, ‘மக்கள் நலக் கூட்டணி’ உருவானது. ஆனால் இந்த முறை இருந்த எதிர்க்கட்சி அந்தஸ்தும் பறி போக, ஆட்சியைத் தக்க வைத்தது அதிமுக.

பிரேமலதா கால தேமுதிக!

தொடர்ந்து 2021 சட்டசபைத் தேர்தல், விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக செயல்பட முடியாமல் போக, அவரது மனைவி பிரேமலதா கட்டுப்பாட்டில் வந்தது கட்சி. திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒரு கூட்டணிக்குச் செல்லுமென எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் இரண்டுமில்லாமல் டி.டி.வி தினகரனின் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு வாக்கு சதவிகித்தை வெகுவாகவே குறைத்துக் கொண்டது.

தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி. விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் விருதுநகரில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

பழம் பாலில் விழுந்தது!

இதோ கட்சி சந்திக்கும் ஐந்தாவது சட்டசபைத் தேர்தல். விஜயகாந்த் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல். மூன்று ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் மறைந்த போது அவரது உடலை திமுக அரசு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்ட போதே, திமுக மீதான கோபப்பார்வை தேமுதிகவுக்கு குறையலாம் என கணித்தனர் அரசியல் விமர்சகர்கள்.

இடையில் ராஜ்யசபா சீட் விஷயத்தில் அதிமுக நடந்து கொண்டவிதமும் பிரேமலதாவை அதிருப்திக்குள்ளாக்க, இன்று திமுக கூட்டணியில் ஐக்கியமாகி இருக்கிறார். கலைஞர் இருந்த போது ஒருமுறை தேமுதிக கூட்டணிக்கு வரவேண்டி, `பழம் நழுவி பாலில் விழும்’ என்றார். அப்போது அது நடக்கவில்லை. இன்று நடந்திருக்கிறது.

பிரேமலதா, எடப்பாடி பழனிசாமி

இவங்க செய்ததும் அவங்க செய்ததும்!

தனிக்கட்சி தொடங்கிய காலம் முதல் இப்போது வரை திமுக, அதிமுக இரண்டுக்கும் தேமுதிகவுடனான உறவை எடுத்துப் பார்த்தால், அதிமுக தன்னுடன் மோதத் தொடங்கிய காலத்தில் மட்டும் அந்தக் கட்சியை உடைக்கும் வேலையைச் செய்தது.

திமுக-வோ கல்யாண மண்டபம் முதல் பிறகு வடிவேலுவை வைத்து கடுமையாக திட்ட வைத்தது வரை சம்பவம் செய்திருக்கிறது.

பாசிடிவான விஷயமாக என பார்த்தால், விஜயகாந்துக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து கிடைக்க காரணமானார் ஜெயலலிதா. விஜயகாந்த் மரணத்தின் போது அரசு மரியாதை செலுத்த உத்தரவிட்டார் ஸ்டாலின்.

இனி தேமுதிகவின் எதிர்காலம் இந்தத் தேர்தலின் ரிசல்ட் வந்த பிறகே தெரியவரும்.!

Loading…

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *