‘தன் கையே கண்ணைக் குத்திய கதை போலத் தான் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
உலக நாடுகளைத் தனக்குப் பணிய வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையிலெடுத்த அஸ்திரம் ‘வரி’.
இதற்கு ட்ரம்பின் 51-வது அமெரிக்க நாடான கனடா மட்டும் விதிவிலக்கு ஆகுமா என்ன?
ஆம்… கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் கனடாப் பொருள்களுக்கு 35 சதவிகித வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த அதிக வரிக்கு ட்ரம்ப் சொன்ன காரணம் – ஃபென்டனைல் போதைப் பொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

சீனா, கனடா Vs அமெரிக்கா
அடுத்ததாக, சீனா – கனடா முன்பு அவர்களுக்குள் இருந்த வர்த்தக பிணக்குகளை மாற்றி, சமரச ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்கொண்டன.
ஆனால், ட்ரம்ப்போ, ‘சீனா உடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைப் போடுகிறது. இது நடந்தால் கனடா மீது 100 சதவிகித வரி விதிக்கப்படும்’ என்று எச்சரித்திருந்தார்.
ஆனால், ட்ரம்பின் இந்தக் கூற்றிற்கு கனடாவின் பிரதமர் கார்னி, “சீனா உடன் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் போடவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அதிக வரி, வர்த்தக தடைகள் குறித்து தான் பேசியிருக்கிறோம்” என்று நாசூக்காக பேக் அடிக்க, 100 சதவிகித வரியில் இருந்து தப்பித்தது கனடா.
இதெல்லாம் முன் கதை. இப்போதைய கதைக்கு வரலாம்.
நேற்று முன்தினம் (புதன்கிழமை – பிப்ரவரி 11), அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள கீழ் சபையில் கனடா மீதான ட்ரம்ப் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா ஒன்று கொண்டு வரப்பட்டது.
ட்ரம்ப் போடும் வரி எல்லாமே அமெரிக்கா அவசர நிலை சட்டத்திற்குக் கீழ் கொண்டு வரப்படுவதாகும். கனடா மீதான வரியுமே அந்த வகை தான்.
இந்த வரிக்கு ஆதரவு தெரிவித்து 219 பேரும்… எதிர்ப்பு தெரிவித்து 211 பேரும் வாக்களித்திருந்தனர்.

இந்த வாக்கெடுப்பில் தான் ஒன்றைக் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. 219 ஆதரவு வாக்குகளில் 6 வாக்குகள் ட்ரம்பின் சொந்த கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களுடையது.
அதாவது, ட்ரம்பின் சொந்த கட்சியினரே அவரது வரிக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
மிரட்டல்
ட்ரம்ப் என்றாலே அதிரடிதான். சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராக வாக்களித்தால், சும்மா விட்டுவைப்பாரா என்ன?
இந்த வாக்களிப்பிற்குப் பின் தனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு, “எனக்கு எதிராக வாக்களித்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் சமயத்தில் கடும் விளைவுகளைச் சந்திப்பார்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரத்தாகாது!
சரி… அதெல்லாம் இருக்கட்டும்… வரிக்கு எதிராக வாக்கெடுப்பில் பாசிட்டிவ் விஷயம் நடந்துள்ளது. அப்போது, கனடா மீதான வரி ரத்து செய்யப்பட்டுவிடுமா என்று கேட்டால், ‘அது தான் இல்லை’.
தற்போது இந்த வாக்கெடுப்பு கீழ் சபையான ‘ஹவுஸ் ஆஃப் ரெப்ரஸ்டென்டேட்டிவ்ஸ்’-ல் தான் நடந்துள்ளது. அடுத்தது, இந்த வாக்கெடுப்பு மேல் சபையான செனட்டிற்கு செல்லும்.
அங்கேயும் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்குகள் குவிந்தால், அடுத்து அதிபர் அதாவது ட்ரம்ப்பிடம் செல்லும்.
அந்த மசோதாவில் கையெழுத்துப் போடவும், மறுக்கவும் ட்ரம்பிற்கே முழு உரிமை.
ட்ரம்ப் நினைத்தால், இந்த மசோதாவை ரத்துக்கூடச் செய்யலாம். அவரிடம் Veto பவர் உள்ளது.

செய்யக் கூடாது என்றால்?
ஒருவேளை, ட்ரம்ப்பால் ரத்து செய்யப்பட்டு விடக் கூடாது என்றால், அந்த மசோதாவிற்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் வேண்டும்.
அதாவது, இப்போது இந்த மசோதாவிற்கு ஆதரவாக 290 வாக்குகள் கிடைத்திருந்தால், ட்ரம்பால் இந்த மசோதாவை ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால், தற்போதைய நிலை அப்படி இல்லை அல்லவா?
அடுத்து என்ன நடக்கும்?
இப்போது கீழ் சபையில் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து இந்த மசோதா செனட்டிற்குச் செல்லும். அங்கே 51 வாக்குகள் இருந்தாலே போதும். அடுத்தது அதிபரின் மேசைக்கு இந்த மசோதா செல்லும்.
ஆனால், இந்த வாக்குகள் எளிதாக கிடைத்துவிடும். ஏனெனில், ஏற்கெனவே ட்ரம்ப் வரிக்கு எதிரான மனநிலை தான் அங்கே நிலவி வருகிறது. மேலும், இரு முறை செனட்டில் வரிக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதன் பிறகு தான் காத்திருக்கிறது ‘செக்’ – ட்ரம்ப்பின் மேசை.
ஒருவேளை, செனட்டைக் கடந்து ட்ரம்ப்பின் மேசைக்கு இந்த மசோதா சென்றால், அவரது முடிவு என்னவாக இருக்கும்? என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
