Sorting by

×

தி.மு.க – வி.சி.க கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் மார்ச் 23-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டணி ஒப்பந்தம் தொடர்பான முக்கிய தகவல்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பகிர்ந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டிலுள்ள தனியார் விடுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் “தி.மு.க கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளையும் 2028-ம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களில் ஒரு ராஜ்ய சபா சீட்டும் தி.மு.க-விடம் கேட்டுப் பெற வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது தி.மு.க கூட்டணிக்குள் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

திருமாவளவன் – ஸ்டாலின் சந்திப்பு

‘வி.சி.க-வின் உயர்நிலை குழு கூட்டத்தில் என்ன நடந்தது?’ என்ற கேள்வியுடன் துணைப் பொதுச்செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்… “2021 சட்டமன்ற தேர்தலில் 6 சீட்டுகளை பெற்று 4 தொகுதிகளில் வென்றது விசிக. இந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு பக்க பலமாக இருந்து கட்சியின் கட்டமைப்பையும் வலுப்படுத்தினோம். இதற்கிடையில் மாநில கட்சியாக அங்கீகாரமும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பெற்றோம். எனவே இந்தமுறை தி.மு.க-விடமிருந்து இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்பதில் நாங்களும் எங்கள் தலைவர் திருமாவும் உறுதியாக இருந்தார். எங்கள் விருப்பத்தையே தீர்மானமாக நிறைவேற்றினோம்” என்றனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள் “தீர்மானம் என்பது கட்சியினரின் விருப்பம்தானே தவிர, 10 தொகுதிகள் கொடுத்தால்தான் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அர்த்தமில்லை. சொல்லப்போனால் தி.மு.க-வுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டதாக கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். அதாவது ‘இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவதுதான் நமது விருப்பம். ஆனால் தி.மு.க-வுக்கு மேலும் சில கட்சிகள் வந்திருப்பதால் தமிழ்நாட்டில் 8 தொகுதிகள்வரை ஒதுக்கீடு செய்ய தி.மு.க சம்மதம் தெரிவித்திருக்கிறது, அதேபோல் புதுச்சேரியிலும் 1 தொகுதி தரவிருக்கிறார்கள்’ என்றார். சி.பி.ஐ, சி.பி.எம், கொ.ம.தே.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு தி.மு.க தொகுதிகளை குறைத்திருக்கும்போது நமக்கு கூடுதல் தொகுதிகள் தந்திருப்பதை பாஸிட்டிவ்வாகவே கட்சியினரும் பார்க்கிறார்கள். இருந்தாலும் தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என பெரும்பாலான வி.சி.க நிர்வாகிகள் உயர்நிலைக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர்” என்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இதுகுறித்து தி.மு.க தரப்பில் விசாரித்தோம் “முதலில் வி.சி.க-வுக்கு 6 தொகுதிகள் தரலாம் என பரிந்துரைத்தது தி.மு.க-வின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி, திருமாவின் அணுகுமுறைகள்மீது எப்போது முதல்வருக்கு மரியாதை இருந்ததால் 7 தொகுதிகள் தர முன்வந்தார். ஆனால், இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும் என உறுதிகாட்டிய நிலையில் 8 தொகுதிகள் தர சம்மதம் தெரிவித்தோம். அநேனமாக 8 தொகுதிகளுக்கு தி.மு.க – வி.சி.க இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புகள் இருக்கிறது” என்றனர்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *