வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக வேலூர் வந்த விஜய்க்கு வழிநெடுக த.வெ.க தொண்டர்களும், ரசிகர்களும் வரவேற்பு கொடுத்தனர்.
வெட்டுவாணம் சந்திப்புப் பகுதியில் த.வெ.க-வினர் திரண்டிருந்தபோது, விஜய்யின் அதிதீவிர தொண்டரான ஏழுமலை என்பவர் முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கி சாகசம் செய்தபடி விஜய்க்கு மாலை அணிவிப்பதற்காக வந்திருந்தார்.
இதற்கு காவல்துறை தரப்பில் இருந்து ஏழுமலை எந்தவித அனுமதியும் பெறவில்லை. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, த.வெ.க தொண்டர் ஏழுமலை மற்றும் கிரேன் உரிமையாளர் முனிரத்தினம் ஆகிய இருவர் மீதும் பள்ளிகொண்டா போலீஸார் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ததோடு கிரேனையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இந்த நிகழ்வின்போது, அங்கு பணியில் இருந்த பாகாயம் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி அவரை `காத்திருப்போர் பட்டியலில்’ வைக்க வேலூர் சரக டி.ஐ.ஜி தர்மராஜன் உத்தரவிட்டிருக்கிறார்.
இதையடுத்து, டி.ஐ.ஜி முன்பு இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு ஆஜராகி விளக்கமளித்திருக்கிறார். பிறகு பணியில் கவனமாக இருக்க அறிவுறுத்தி கண்டித்த டி.ஐ.ஜி தனது நடவடிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டாராம்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
