சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய தவெக தலைவர் விஜய், “கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லை.
கட்சி தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள்.
முடிந்தால் என்னை போல் புதிய கட்சி தொடங்கி 1 சதவிகித வாக்கு வாங்க முடியுமா?” என்று சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரனிடம் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், ” பாவம்..விஜய் அனுபவமே இல்லாதவர்.
முதலில் வீட்டை விட்டு அவர் வெளியில் வர வேண்டும். (ஒரு பெயரை சொல்லி)நடிகையிடம் இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாம் நடக்கும்.
நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கங்கள் பற்றி நல்லதாக அவர் பேச வேண்டும்” என்று நடிகையின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.
நயினாரின் இந்த விமர்சனத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.

அந்தவகையில் எம்.பி தமிழச்சி தங்கப் பாண்டியன் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல.
பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
