தேசிய ஜனநாயக் கூட்டணியில் பழநி தொகுதியை பா.ஜ.க-விற்கு ஒதுக்காததைக் கண்டித்து பா.ஜ.க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
”பழநி தொகுதி பா.ஜ.க-விற்கு ஒதுக்கப்படுமென நம்பிக்கையோடு வேலை பார்த்தோம். ஆனால், திடீரென அதிமுக-விற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது எங்களுக்கு ஏமாற்றமாகியிருக்கிறது. இது அதிருப்தியின் உச்சம்” எனக் கூறி இன்று காலை பழநி புலிப்பாணி ஆசிரமத்துக்கு வந்த மத்திய இணையமைச்சர் எல். முருகனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் பாஜகவினர்.
நேற்று பழநி வந்தவர், மலைக்கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.
இன்று பழநியில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியிருக்கிறார். அப்போது, ”விஜய்யின் பிரசாரத்திற்கு மட்டும் அனுமதி கிடைக்கவில்லை என்கிறாரே?” எனக் கேட்டதற்கு, “தேர்தல் விதிகள் என அனைத்துமே இப்போது டெக்னாலஜிதான். விஜய் அவரைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக இதனைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கிறது. ஆன்லைன் மூலமாகவே அவர்கள் கேட்கலாம்” என்றவர் செந்தில் பாலாஜி கரூர் தொகுதியிலிருந்து கோவை தெற்கு தொகுதிக்கு மாற்றப்பட்டது குறித்து பேசும்போது, “கரூரில் மக்கள் அவர் மீது அதிருப்தியில் இருக்கலாம்.

அதாவது கரூரில் அவர்கள் செய்யாத அட்டகாசம் இல்லை. அதனால் கரூர் மக்கள் அவரைப் புறக்கணிப்பார்கள் என நினைத்து கோவைக்கு வந்திருக்கலாம்” என்றவர், “கூட்டணி குறித்து மாநிலத் தலைவர் நிறைய பேசிவிட்டார்.
இது எங்கள் கூட்டணி. அதனால் இந்த ஊர், அந்த ஊர் என நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய கூட்டணி.
அப்படித்தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். திமுக-வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம்” எனக் கூறியிருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
