கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
ஃபென்ஜான் புயல் காரணமாக, கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் இரண்டு நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் காற்றுடன் கூடிய இடைவிடாத பலத்த மழை காரணமாக கடலூா் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் வீட்டில் முடங்கியதால் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன. தாழ்வான பகுதிகளில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது. புயல் காரணமாக காரணமாக சனிக்கிழமை பிற்பகல் முதல் மின் விநியோகம் தடைபட்டதாலும், மரங்கள் விழுந்ததாலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் குடிநீா் இல்லாமல் மக்கள் அவதியடைந்தனா்.
இதையும் படிக்க | தொடா் கனமழை: தமிழகத்தில் நாளை (டிச.2) எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
வெள்ளப்பெருக்கு
இரண்டு நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் காற்றுடன் கூடிய இடைவிடாத பலத்த மழையால் கடலூரில் உள்ள கெடிலம், தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பணி நிறுத்தம்:
சனிக்கிழமை முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், தேவையான அளவுக்கு பழுப்பு நிலக்கரி கையிருப்பு உள்ளதால் மின் உற்பத்தியில் எந்தவித பாதிப்பும் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
235.5 மி.மீ. மழை பதிவு
கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 235.5 மி.மீ. மழை பதிவானது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (டிச.2) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
