Sorting by

×

அ.தி.மு.க-வின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை முறைப்படி தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் தி.மு.க-வில் இணைந்தனர்.

அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்!

இந்த இணைவுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.

திமுகவில் இணைந்த ஒபிஎஸ்
திமுகவில் இணைந்த ஒபிஎஸ்

2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பதிவின் மூலம் தி.மு.க தாய்க் கழகம். அதில் இணைவதில் எந்தக் கொள்கை முரணும் இல்லை என்பதையும், சட்டமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ்-க்கு முக்கியப் பங்கு இருக்கும் என்பதையும் சூசகமாக உணர்த்துகிறார்.

ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பின்போதுகூட, தாய்க் கழகம் என்றும், தலைமையின் ஆலோசனைக்கு கட்டுப்படுவேன் என்றும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டியிடத் தயார் என்றும் திமுக தலைமைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

பன்னீர் செல்வம் - ஸ்டாலின்
பன்னீர் செல்வம் – ஸ்டாலின்

இதன் பின்னணியில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு போடி தொகுதி ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.க-வின் பாரம்பர்ய வாக்கு வங்கியில் முக்குலத்தோர் சமூகத்தினர் மிக முக்கியமானவர்கள். ஓ.பி.எஸ் தி.மு.க-விற்குச் வந்திருப்பதால் முக்குலத்தோர் வாக்கு சிதறும் சூழல் உருவாகியிருக்கிறது என்கிறார்கள்.

எனவே, ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த அதிரடி மாற்றம் மூலம் யாருக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம் என்றக் கேள்வியுடன் மூத்த ஊடகவியலாளர் அய்யநாதனைத் தொடர்புகொண்டோம்.

அ.தி.மு.க-விலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா நீக்கப்பட்ட அன்றே அந்த கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. ஜெயலலிதா காலத்தில் 42 சதவீதமாக இருந்த அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி, தற்போது 23 சதவீதமாகக் குறைந்ததற்கு எடப்பாடி பழனிசாமியின் தவறான அணுகுமுறையே காரணம்.

ஏனெனில் ஜெயலலிதா இறந்த பிறகு கட்சி பலவீனமடைந்தது. டெபாசிட் இழப்பு போன்ற சம்பவங்கள் அ.தி.மு.க வரலாற்றில் இல்லாதவை. அ.தி.மு.க வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்றாலும், சில இடங்களில் வாக்குகள் சிதறி, ஓ.பி.எஸ். போன்றோருக்கு 3.5 லட்சம் வாக்குகள் கிடைக்கும் நிலை உருவானது.

அய்யநாதன்
அய்யநாதன்

ஓ.பி.எஸ் செல்வாக்கு என்பது வெறும் ‘முக்குலத்தோர்’ என்ற சாதி வட்டத்திற்குள் அடங்குவது கிடையாது. ஜெயலலிதா இக்கட்டான சூழலில் சிறைக்குச் சென்றபோதெல்லாம், நம்பிக்கைக்குரியவராக இருந்து முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றித் தந்தவர் ஓ.பி.எஸ். இந்த விசுவாசம் மக்கள் மனதில் அவர் மீது ஒரு தனி மரியாதையை உருவாக்கியுள்ளது.

தனிப்பட்ட முறையில் அவர் தனது தொகுதிக்கும், மக்களுக்கும் செய்துள்ள நற்பணிகள் இன்றும் பேசப்படுகின்றன. இதனால்தான், கடந்த தேர்தலில் 3.5 லட்சம் வாக்குகளைப் பெற முடிந்தது. இந்த மக்கள் செல்வாக்கை எடப்பாடி சரியாகக் கையாளத் தவறியதே அ.தி.மு.க-வின் தற்போதைய பின்னடைவு.

ஒரு காலத்தில் ஜெயலலிதாவால் எதிர்காலத் தூணாகக் கருதப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனை இபிஎஸ் சரியாக நடத்தாததால், அவர் இன்று தி.மு.க-வின் தேனி எம்.பி-யாக இருக்கிறார். தற்போது ஓ.பி.எஸ்-ஸும் தி.மு.க-விற்குச் சென்றிருப்பது அந்தப் பகுதியில் தி.மு.க-வுக்கு பெரும் பலத்தை தந்துவிட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கொங்கு மண்டலத்தில் தி.மு.க பலவீனமாக இருப்பதாகச் சொல்லப்படுவதும் பொய். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மையப்புள்ளியாக இருந்த அந்தப் பகுதியில், திராவிட உணர்வு அதிகம். பா.ஜ.க-வின் அண்ணாமலை அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்பட்டாலும், தேர்தல் முடிவுகள் திமுக-வின் பலத்தையே காட்டுகின்றன.

எடப்பாடி தன்னை மட்டுமே மையப்படுத்தி, கட்சியின் விதிகளை மாற்றி ‘ஒற்றைத் தலைமை’யைக் கொண்டு வந்தது தொண்டர்களுக்குத் தெரியும். இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்த அ.தி.மு.க-வை உடைத்து, சிதைத்தது எடப்பாடிதான் என்பது தொண்டர்களின் எண்ணம்.

ஓ.பி.எஸ்-ஸைப் பார்த்து ‘திமுக-வின் பி டீம்’ என எடப்பாடி அப்போது வைத்த குற்றச்சாட்டு வெறும் அரசியல் விமர்சனமே தவிர, அதில் உண்மையில்லை. ஏனென்றால் இறுதிவரை அதிமுக-வில் இணைவதற்கு ஓ.பன்னீர் செல்வம் தயாராகவே இருந்தார். அவரின் முடிவு திமுக தான் என்றால் அவர் அப்போதே வந்திருக்கலாம். ஆனால், ஓ.பி.எஸ்-ன் இந்த முடிவுக்கு எடப்பாடிதான் காரணம்.

தி.மு.க-அ.தி.மு.க இடையே அரசியல் எதிர்ப்பு தான் இருக்கிறதே தவிர கொள்கை மாற்றம் அல்ல. இது திராவிட சக்திகளின் மறுசீரமைப்பு எனக் கூறும் முதல்வர் ஸ்டாலின், பழைய பா.ஜ.க உறுப்பினர்களை கூட இழுத்து, மிக லாவகமாக காய்களை நகர்த்துகிறார்.

திமுகவில் இணைந்த ஒபிஎஸ்
திமுகவில் இணைந்த ஒபிஎஸ்

கொள்கை ரீதியாக திராவிடச் சக்திகளை ஒன்றிணைப்பதன் மூலம், 2026 தேர்தலில் தி.மு.க தனித்துப் போட்டியிட்டாலும் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் அளவுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார். ஓ.பி.எஸ்-ஸிற்கு போடி தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஸ்டாலினின் ஆட்சியின் மீதான மக்கள் செல்வாக்கே இத்தகைய பெரிய தலைவர்களை தி.மு.க நோக்கி ஈர்க்கிறது.” என்றார்.

மறுபுறம் அதிமுக ஆதரவாளர்களோ, “பன்னீர் ஒரு துரோகி என்று சொல்லி தான் வந்தோம். இப்போது அதனை மக்கள் கண்கூடாக பார்த்துவிட்டார்கள். பன்னீர் எப்போதுமே கட்சிக்காக செயல்பட்டவர் கிடையாது. தனக்காக செயல்பட்டவர் தான் பன்னீர். கட்சிக்காக செயல்பட்டவராக இருந்திருந்தால், தலைமை அலுவலகத்தில் அப்படி ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பாரா? தீய சக்தி திமுக எப்படி இப்போது தாய் கழகம் ஆனது? அவருக்கு ஆதாயம் வேண்டும் என்பது மட்டுமே அவர் நோக்கம். அவர் மூலம் அவர் சார்ந்த சமூகம் கூட பலன் அடைந்தது கிடையாது. அதனால், அவரின் திமுக சேர்க்கை, அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்கிறார்கள்.

Loading…

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *