ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை என தில்லி அமைச்சர் அதிஷி விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஜாமீனில் வெளிவந்ததிலிருந்து பாஜக பல்வேறு வகைகளில் அவருக்கு இடையூறு செய்து வருகிறது. ஸ்வாதி மாலிவால் எந்த முன் அனுமதியும் இன்றி முதல்வர் இல்லத்திற்கு வந்து அவரை பார்க்க வேண்டும் என பிரச்னை செய்தார்.
ஸ்வாதி மாலிவால் முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பது போன்று எதுவும் நடக்கவில்லை.
முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே சுவாதி இதுபோன்று செய்து வருகிறார். கேஜரிவாலுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதே அவரது நோக்கம். மாலிவால் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது பாஜகவின் சதி என்பதை முழுச் சம்பவமும் நிரூபிக்கிறது. மாலிவால் மீது குமார் போலீசிலும் புகார் அளித்துள்ளார் என்றார்.
கடந்த திங்களன்று தில்லி முதல்வரின் இல்லத்திற்குச் சென்றபோது முதல்வரின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாா் தன்னை தாக்கியதாக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்குச் சென்று ஸ்வாதி மாலிவால் புகார் அளித்தார். ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில் கேஜரிவாலின் உதவியாளா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் வியாழக்கிழமை அழைப்பாணை அனுப்பியது.இதற்கிடையே ஸ்வாதி மாலிவாலினை தில்லி காவல் துறையின் கூடுதல் ஆணையா் பிஎஸ் குஷ்வாஹா தலையிலான குழு வியாழக்கிழமை பிற்பகலில் மாலிவால் இல்லத்திற்குச் சென்று விசாரணை நடத்தியது.
சுமாா் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கேஜரிவாலின் உதவியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஸ்வாதி மாலிவால் தில்லி காவல் துறையிடம் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார்.
