ஹாங்காங்கில் பாரம்பரிய ’பன் திருவிழா’ வியாழக்கிழமை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
புத்தர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்த பன் திருவிழா வெகுவிமரிசையாக ஹாங்காங்கில் கொண்டாடப்படுகிறது.
1978-ஆம் ஆண்டு நடைபெற்ற ’பன் திருவிழாவில்’ பன் கோபுரம் சரிந்து விழுந்ததில் பலர் காயமடைந்த நிலையில், அதன்பின், பன் திருவிழா பல ஆண்டுகளாக நடைபெறாமல் தடைபட்டிருந்தது. இந்த நிலையில், 2005-ஆம் ஆண்டிலிருந்து பன் திருவிழா மீண்டும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இத்திருவிழாவிற்காக, சுமார் 9,000 பிளாஸ்டிக் பன்களால் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக 46 அடி உயர, பன்களால் அலங்கரிக்கப்பட்ட கம்பத்தில் ஏறி பன்களைப் போட்டி போட்டுக்கொண்டு பறித்தனர் போட்டியாளர்கள். இந்த திருவிழாவை காண உள்ளூர் மட்டுமன்றி ஏராளமான வெளிநாட்டினரும் வந்திருந்தனர்.
அதிக எண்ணிக்கையில் பன்களை பறித்துக் கொள்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அதில் 776 புள்ளிகளைப் பெற்று, யிப் கின் மேன் ‘பன் ராஜா’ பட்டத்தை தட்டிச் சென்றார். மகளிர் பிரிவில், 842 புள்ளிகளை பெற்ற ஜங் ஸ்-ஷான் ‘பன் ராணி’-ஆக அறிவிக்கப்பட்டார்.
