அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகத்தை தொடங்கியிருக்கிறார் சசிகலா. நிர்வாகிகள் மத்தியில் விருப்ப மனு வாங்க பெரிய ஆர்வம் இல்லாததால் சசிகலா கடும் அப்செட் என்கின்றனர் அ.இ.பு.த.ம.மு.க கட்சியினர்.

மார்ச் 13 ஆம் தேதி அ.இ.பு.த.ம.மு.க என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட சசிகலா, ஒரு நாள் விட்டு ஒரு நாள் என கட்சியின் நிர்வாகிகளையும் ஆதரவாளர்களையும் தொடர்ந்து சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் சசிகலாவின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் இன்று முதல் 22.03.2026 வரை விருப்ப மனுக்களை வழங்கலாம் என நேற்று அறிவிக்கப்பட்டது.
இன்று காலை 11 மணிக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சசிகலாவின் வீட்டு வாசலில் அதிகபட்சமாக 15 பேர் மட்டுமே விருப்ப மனு வாங்க வந்திருந்தனர். விருப்ப மனு வாங்க வரவேற்பு இல்லாததை அறிந்த அ.இ.பு.த.ம.மு.க நிர்வாகிகள் கொஞ்ச நேரம் காத்திருக்க முடிவெடுத்தனர். 11:30 மணிக்கு நல்ல நேரம் முடிவடைய இருந்ததால் அந்த சமயத்தில் கூடியிருந்தவர்களை உள்ளே அனுப்பி திருத்தணி நரசிம்மன் தலைமையில் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கினர்.

அலைகடலென கூடியிருந்த நிர்வாகிகளுக்கு விருப்ப மனுவை கொடுத்துவிட்டு, பத்தே நிமிடங்களில் நரசிம்மன் கிளம்பி சென்றார். அலுவலகத்தில் போடப்பட்டிருந்த சேர்கள் காலியாக கிடந்தன. கூட்டம் எகிறும் என நினைத்து 300 பேருக்கு டீயும் தயார் செய்து வைத்திருந்தனர். நான்கு பேர் சேர்ந்து நின்று டீ குடிக்கும் அளவுக்குக் கூட கூட்டம் இல்லாததால் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
திருத்தணி, ஆவடி, திருப்பெரும்புதூர், பூந்தமல்லி தொகுதிகளுக்கு ஒரு சிலர் விருப்ப மனுக்களை வாங்கியிருந்தனர். அவர்களும் ‘கூட்டமே இல்லாததால் அன்னபோஸ்டாக சீட் கிடைக்கும்’ என்று மகிழ்ச்சியாக கிளம்பிச் சென்றனர்.
விருப்ப மனுவில், ‘நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியில் தோராயமாக எவ்வளவு செலவாகும்? உங்களால் சொந்தமாக எவ்வளவு செலவு செய்ய முடியும்? மீதத் தொகைக்கு என்ன செய்வீர்கள்?’ என்று ஒரு கேள்வி அழுத்தம் திருத்தமாக கேட்கப்பட்டிருந்தது.

‘அது என்ன தேர்தல் செலவா சார் கேட்குறாங்க…’ என பேச்சுக் கொடுத்தால்…’வாய்ல அடிங்க…வாய்ல அடிங்க…அது ‘புரட்சி நிதி’ என்கின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.
விருப்ப மனு விநியோகம் ஆரம்பித்த 1 மணி நேரத்தில் 51 மனுக்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் சசிகலா கடும் அப்செட் என்கின்றனர் அ.இ.பு.த.ம.மு.க கட்சி வட்டாரத்தினர்
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
