Sorting by

×

‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ என்ற பெயரில் திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். ஏற்கெனவே, பல தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தமாக 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை அவரது சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

candidaters

மேலும், இந்த வேட்பாளர் பட்டியில் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என ஆண் பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில், 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், 70-க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழா மேடையில் சிறப்பான ஏற்பாடுகளாக 234 பேரும் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு, விழா மேடை முழுவதும் தமிழ் அறிஞர்கள், சங்க கால புலவர்கள், தமிழுக்காக போராடியவர்களுடைய படங்கள் வைக்கப்பட்டிருந்தது. தவிர விழா மேடை அரங்கு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாய சின்னம் மற்றும் நாம் தமிழர் கொடி மற்றும் மூவேந்தர்களின் கொடிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், மாவட்ட வாரியாக தொண்டர்கள் அமர்வதற்காக தனி தனி கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தது.

candidaters

அதோடு, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்து மணிக்கு விழா மேடைக்கு வந்த சீமான் ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியாக அறிமுகம் செய்தார். அதோடு, தான் காரைக்குடியில் போட்டியிடப் போவதாகவும் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, இந்த மாநாட்டில் பேசிய சீமான்,

“எங்களின் அரசியல் இதுவரை இந்த நிலத்தில் இருக்கின்ற அரசியலிலிருந்து முற்று முழுதாக மாறுபட்டது. அரசியல் என்பது ஒரு வாழ்வியல் என்ற புரிதலோடு வந்த பிள்ளைகள் நாங்கள். ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசைத் தீர்மானிப்பது அரசியல். எமக்கான மூச்சுக்காற்றை நாங்களே சுவாசிப்பது போல, உணவை நாங்களே உண்பது போல, எமது உரிமையை எமது விடுதலையை நாங்களே போராடிப் பெறுவது என்ற நோக்கோடு வந்தவர்கள்.

seeman

எங்களுடைய கனவு ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல; ஆட்சி முறை மாற்றம். அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றமே எங்கள் இலக்கு. கட்டிய கட்டடத்திற்கு வெள்ளை அடிக்க வந்த சீர்திருத்தவாதிகள் அல்ல நாங்கள். அந்தக் கட்டடத்தையே இடித்துவிட்டுப் புத்தம் புதிதாகப் புதிய ஒரு கட்டடத்தைக் கட்ட வந்த புரட்சிவாதிகள். இங்கே மக்களுக்கான அரசியல் இல்லை. செய்தி மற்றும் விளம்பர அரசியல் மட்டுமே இருக்கிறது. சேவை மற்றும் செயல் அரசியல் இல்லை.

ஐந்தாவது முறையாக ஒரு அரசியல் கட்சி எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நிற்கிறது என்றால், அது இந்திய துணைக் கண்டத்திலே நாம் தமிழர் கட்சி மட்டும்தான். பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, வனக்கொள்ளை, மது-மத போதை என்று இது ஏதுமற்ற புதிய ஒரு தேசத்தைச் செய்வோம். கடந்த 2016-ல் வெறும் 1.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றோம். மற்ற கட்சிகளாக இருந்தால் தடம் தெரியாமல் போயிருக்கும். ஆனால், கொண்ட உறுதி மற்றும் லட்சியச் சுமையால் தொடர்ந்து எவரோடும் சமரசம் செய்யாமல் தனித்துப் போராடுகிறோம்.

crowd

5 -வது முறையாக சீட்டுக்கும், நோட்டுக்கும் போகாமல் தனித்து நிற்கின்றது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான். நாங்கள் கூட்டணி என்ற வியாபாரம் செய்ய வரவில்லை. அரசியல் சுதந்திரத்திற்காக தனித்து நிற்கின்றோம். மக்களை நம்பியே தனித்து நிற்கின்றோம். இது, ரசிகர் கூட்டம் இல்லை. லட்சிய கூட்டம். திரை கவர்ச்சியா, இன எழுச்சியா என்று நிரூபிக்க வந்த கூட்டம். மாநாடு என்றால் எப்படி இருக்க வேண்டும்?. கருத்தியல் புரச்சியாளர்கள் இங்கு வந்திருக்கின்றார்கள். அரசியல் பெரும் படையை கட்டி எழுப்பி வருகின்றோம்.

எங்களுக்கான வரலாற்றை எழுத கூடியுள்ளோம் திருச்சியில். இலவசத்தில் 15,000 கோடி. அந்த இலவசத்தில் இழக்கின்ற பணத்தை எங்கிருந்து பெறுவார்கள்?. படிக்கும் போது பணம். படித்து முடித்தால் பணம் வராது. அவர்களுக்கு வேலையை ஏற்படுத்த வேண்டும். அது தான் ஆட்சி முறை. ஆணுக்கும், பெண்ணுக்கும் இலவசம். ஓட்டுநருக்கும், நடத்துநருக்கு சம்பளம் எப்படி?. இலவசம் வாங்கும் அம்மா கையிலே இரண்டு லட்சம் கடன் உள்ளது. இதை உணரவேண்டும். தனியார் மருத்துவமனைகள் தான் சிறந்த மருத்துவத்தை கொடுக்க முடியும் என்றால் அரசால் ஏன் முடியாது? தனியாரிடம் தோல்வியடைந்ததா அரசு? கடன் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாக எப்படி பார்க்க முடியும்? தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் ஒரே கட்சி.

seeman

இரண்டும் ஒரே இடத்தில் எப்படி கொள்ளை அடிக்க முடியும் என்று பயிற்சி எடுத்த கட்சி. இரண்டும் ஊழல் கட்சி. இது, திருடர்கள் முன்னேற்றம். அது, அனைத்துலக திருடர்கள் முன்னேற்றம். பா.ஜ.க, காங்கிரஸூக்கு என்ன மாற்றம் இருக்கின்றது?. எந்த இடத்தில் தி.மு.க-விற்கும், அ.தி.மு.க-விற்கும் மாற்றம் இருக்கின்றது. இவர்கள் யாரோடும் சேராமல் நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி. மனசாட்சி வழிநடத்த செல்கின்றோம். அதனால் தான் தனியாக செல்கின்றோம். அடுத்தவன் தோள் மேல் நின்று உயரத்தை காட்டுவதை விட தனித்து நிற்கின்றோம்” என்றார்.

அதனைத்தொடர்ந்து, மேடைக்கு முன் கூடியிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களை பார்த்து, “இது, ரசிகர்கள் கூட்டம் இல்லை.. லட்சிய கூட்டம்” என்று கூறிய சீமான், ”8.5 விழுக்காடு வாக்கு வைத்திருக்கிறோம். பணமும் பதவியும் சீட்டும் நோட்டும் தான் என்றால்… நாம் தமிழர் கட்சி பணத்திற்காக இல்லை. என் இனத்திற்காக. இந்தித் திணிப்புக்கு எதிராகத் தன் உயிரைத் தந்த பாட்டன் நடராஜன் மற்றும் தாளமுத்து தொடங்கிய மொழிப் புரட்சி இன்னும் தொடர்கிறது. இனம் செத்துவிடக் கூடாது என்று செத்தார்கள் நமது முன்னவர்கள். வீழ்ந்த தமிழினம் எழுந்தது மறுபடியும் போரிட்டு வென்றது என்ற வரலாற்றைப் படைக்க வேண்டும்.

crowd

விழுவோம் விதையாய், எழுவோம் விடுதலையாய் என்ற லட்சிய முழக்கத்தை முன்வைத்து, அடுத்த ஆண்டு தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம்” என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேல் பேசிய சீமான், ”என்னம்மா தேவி ஜக்கம்மா.. நாடு நாசமா போகுதே நியாயமா?. கண்ண தொறந்து பார்ரம்மா.. எங்க கவலைய கொஞ்சம் தீரம்மா… 10 லட்சம் கோடி கடனுல நாடு… இதுல இலவசங்கள் பெரு வெட்க கேடு… பாக்க சகிக்கல சனம் படும் பாடு… இதை வளர்ச்சினு போடுறான் போடு” என்று பாடலை பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *