பாகிஸ்தானில் 213 ஆப்கன் அகதிகள் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டினரை நாடு கடத்த விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவானது வரும் மார்ச் 31 அன்று முடிவடையவுள்ள நிலையில் தற்போது 213 ஆப்கான் அகதிகள் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரத்தில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் 923 ஆப்கன் மக்கள் கைது செய்யப்பட்டு கோல்ரா மொர் பகுதியிலுள்ள ஆப்கன் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். அதில், 213 பேர் நேற்று (மார்ச் 27) ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டு தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 26 அன்று அகதிகள் முகாமிலிருந்து 22 கைதிகள் தப்பி சென்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 86 பேருடைய விசா காலாவதியானதாகவும், 116 பேர் ஆப்கன் குடியுரிமை அட்டை உரிமையாளர்கள் எனவும் 290 பேர் பதிவு செய்த சான்றுகள் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் அரசு பாகிஸ்தானின் இஸ்லாமபாத் மற்றும் ராவல்பிண்டியில் வாழ்ந்து வரும் ஆப்கன் நாட்டினர் வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபின் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு முடிவதற்குள் ஆப்கன் நாட்டினரை வலுக்கட்டாயமாக நாடு கடத்துவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பல்வேறு மனித நேயமற்ற முறைகளைக் கையாள்வதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு ஐக்கிய நாடுகள் உள்பட சர்வதேச அளவிலான மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: லெபனான் – சிரியா இடையே எல்லை வரையறை ஒப்பந்தம்!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
