Sorting by

×

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுமைய்யம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை (மே 15) வெளியிட்ட அறிக்கை:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று (மே 15) தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (மே 16) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்ப அலை முன்னெச்சரிக்கை

மே 15 முதல் 19 வரை: அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கும்.

வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 37-39 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-37 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-36 டிகிரியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள்

மே 15,16 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்க்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *