Sorting by

×

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று(மே 17) கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், நாளை (மே 18) தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே மே 19, 20 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட “ரெட் அலர்ட்”யை வானிலை ஆய்வுமையம் திரும்பப்பெற்றது.

இந்த நிலையில் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது. ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் அடிப்படையில் 300 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். கன்னியாகுமரி 90, நீலகிரி 90, கோவை 30, நெல்லையில் 90 வீரர்கள் கொண்ட பேரிடர் மீட்புக்குழு ஆயத்த நிலையில் உள்ளது என மாநில பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *