சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரில் நேற்று முன்தினம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர். மதூர் சத்யா எப்படி சிக்கினார்?
பெண்களை ஏமாற்றி அவர்களுடன் அந்தரங்க வீடியோக்களை எடுத்து வெளியில் பரப்பியதாக மதூர் சத்யா மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவர் மீதான புகாரைப் பாதிக்கப்பட்ட பெண்கள் முதலில் சி.பி.ஐ கட்சிக்கே எடுத்து சென்றிருக்கின்றனர்.
சி.பி.ஐ யின் முக்கிய நிர்வாகிகள் கூடிப் பேசி புகார் மற்றும் ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதன்பிறகே அவரை கட்சியை விட்டு நீக்கியதோடு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்களின் புகார் பற்றி அறிய இந்த விவகாரத்தைக் கையாண்ட சி.பி.ஐ-யைச் சேர்ந்த பாரதி மற்றும் ரஞ்சனி கண்ணம்மாவிடம் பேசினோம்.
“அந்த நபர் மீது புகார் வந்தவுடன் எங்களுக்கே முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் தத்துவம்.
அதன்படி பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரை அவர்களின் தனியுரிமையை மதித்து விசாரித்தோம். மார்ச் 13 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், எங்கள் அமைப்பின் தோழர் ஒருவரை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மனம் நொந்துப் பேசி புகார் கூறியிருக்கிறார்.
அன்று மாலையே முக்கிய நிர்வாகிகளெல்லாம் ஆன்லைன் வழியாகக் கூடி புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, முகாந்திரம் இருப்பின் மதூர் சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டோம். புகார் கூறிய பெண் பெரும் மன உளைச்சலிலும் பதற்றத்திலும் இருந்தார்.
அவரைத் தேற்றி தைரியமூட்டி, அவரின் அடையாளம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வோம் என உத்தரவாதம் கொடுத்தோம். அதன்பிறகுதான் அந்தப் பெண் கொஞ்சம் நம்பிக்கையாக தன்னிடம் இருந்த வீடியோக்களை எங்களிடம் ஒப்படைத்தார்.
வெளியேவே பகிரமுடியாத அந்தரங்க வீடியோக்கள் அவை. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, நட்பாகப் பழகும் பெண்களிடம் நம்பிக்கை கொடுத்து உறவில் இருந்திருக்கிறார். அவர்களுடன் தனிமையில் அந்தரங்கமாக இருக்கும் போது அவற்றை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார்.
எடுத்த வீடியோவை வெளியில் மற்ற பெண்களுக்கும் பகிர்ந்து, வேறு சில பெண்களையும் ஏமாற்ற முயன்றிருக்கிறார். தங்களின் வீடியோ அவரின் மூலம் வெளியில் பரவுவது தெரிந்த பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்கள் மன அழுத்தத்துக்கும் அச்சத்துக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.

இது எல்லாமே அமைப்புக்கு வெளியே இருக்கும் பெண்கள். அமைப்புக்குள் இருக்கும் பெண்கள் ஒரு சிலருக்கும் தவறான எண்ணத்தில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்திருக்கிறார். அதன் ஸ்க்ரீன் ஷாட்களும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது வரைக்கும் 8 பாதிக்கப்பட்ட பெண்கள் கமிட்டியில் புகாரளித்திருக்கின்றனர்.
2 பெண்கள் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். மதூர் சத்யா அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதாலும் பிரபலமானவர் என்பதாலும் அவர் மீது புகார் கொடுக்க பெண்கள் தயங்கினர். அவர்களைத் தேற்றி புகாரளிக்க செய்து, அவர்களுக்கான சட்ட உதவிகளையும் பார்த்துக் கொள்ள சி.பி.ஐ தயாராக இருக்கிறது” என்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
