Sorting by

×

அ.இ.அ.தி.மு.க-வை தொடங்கிய எம்.ஜி.ஆர் மற்றும் தொடர்ந்து வழி நடத்திய ஜெயலலிதா ஆகிய இருவருக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பதவியில் கொஞ்சம் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்கிறார் எடப்பாடி கே பழனிசாமி.
ஜெயலலிதா மறைந்த போது முதலமைச்சர் நாற்காலியிலிருந்த ஒ.பன்னீர்செல்வம், திமுக உறுப்பினராகி விட்டார்.

ஜெ.க்குப் பிறகு கட்சியைக் கைப்பற்றி விடுவாரோ என பலரும் நினைத்த வி.கே. சசிகலா தனிக்கட்சி தொடங்கி விட்டார். டி.டி.வி தினகரனை பன்னீர்செல்வம், சசிகலா போல் போட்டியாகக் கருதவில்லை பழனிசாமி. இருந்தாலும் அவருமே பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டு விட்டார்.

பிறகென்ன, கட்சித் தலைமைப் பொறுப்புக்கு ரூட் க்ளியர் ஆகி விட்டது. ஆனால் ஆட்சிக்கு?

ஜெ.மறைந்த போது கட்சி ஆட்சி பீடத்தில் இருந்தது. 2016 தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே அவர் இறந்து விட, அடுத்த ஐந்தாண்டுகள் பழனிசாமி முதல்வராக இருந்தார். ஐந்தாண்டுகள் முடிய 2021 தேர்தலில் 60க்கும் அதிகமான இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் சென்றது கட்சி.

ஒ பன்னீர் செல்வம்

பன்னீர் அண்ட் கோ

இந்த இடத்தில் ‘ஜெ இல்லாத போதே இவ்வளவு எம்.எல்.ஏ.க்கள் என்றால், ஜெ இருந்திருந்தால் நிச்சயம் மூன்றாவது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருப்பார்’ என்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனாலும் பழனிசாமி தன்னை முதல்வராக முன் நிறுத்திய முதல் தேர்தலில் தோல்விதான் கிடைத்தது.
இந்த தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பு சசிகலா வெளியேற்றப் பட்டது, தினகரன் எம்.எல்.ஏக்களை இழுத்தது என அதிமுகவில் அரங்கேறிய பல சம்பவங்களுக்கு இந்த தோல்வியில் பங்குண்டு என்கிறார்கள் இ.பி.எஸ்.சின் ஆதரவாளர்கள்.

பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சி அமைய, ‘அவ்வளவுதான், இனி அதிமுக சிதறி விடுமென எதிர்க்கட்சிகளும் அதிமுகவில் பழனிசாமி தலைமைக்குச் சிக்கல் வருமென உள்கட்சியில் சிலரும் உள்ளூர மகிழ்ந்தனர்.
ஆனால் ‘கூடவே இருக்கும் பன்னீர்செல்வம் பின்னால் இருக்கும் மூன்று பேரைத் தவிர வேறு எவரும் எந்தக் கட்சிக்கும் செல்ல மாட்டார்கள்’ என மிகச் சரியாக கணித்தார் பழனிசாமி.

அவர் நினைத்தது போலவே நடந்து பன்னீருடன் அவர் அணியிலிருந்த ஐயப்பன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூன்று  பேர் திமுக பக்கம் போயிருக்கின்றனர்.

சீனியரான செங்கோட்டையன் கணக்கு தனி. ஏனெனில் அவரையுமே தன் பதவிக்குப் போட்டியாக கருதவில்லை பழனிசாமி.
சரி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நாட்களும் முடிந்து 2026 தேர்தலும் வந்து விட்டது.

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இந்த ஐந்தாண்டுமே பன்னீர், சசி, டிடிவி ஆட்களால் வழக்கு, வாய்தா என ஏகப்பட்ட பஞ்சாயத்துகளை சந்தித்து  வந்த நிலையில் இப்போது எல்லாவற்றுக்கும்  ஒரு எண்டு கார்டு வந்திருக்கிறது

ஆனால் ‘இனிமேல்தான் பழனிசாமிக்கு நிஜமான போராட்டம் இருக்கிறது’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

‘இவ்வளவு நாளும் அவர் உட்கட்சியினருடன் மோதிக் கொண்டிருந்தார். இனிமேல் களத்தில் எதிர்த்து நிற்கும் கட்சிகளுடன் மோத வேண்டும். திமுக 2011 முதல் 2021 வரை பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லை. இந்தக் காலக்கட்டத்தில் நடந்த இடைத் தேர்தலில் கூட அந்தக் கட்சி ஜெயிக்கவில்லை. பழனிசாமி 2021 ல் ஆட்சியை இழந்தார். இப்பொது ஐந்தாண்டு கழித்து தேர்தலைச் சந்திக்கிறார். ஆனால் திமுக ஐ.டி. விங் ‘பத்து தோல்வி பழனிசாமி’ என கிடைக்கிற கேப்பில் எல்லாம் அவரது இமேஜை டேமேஜ் செய்கிறது.

இந்த மாதிரியான பிரசாரங்களூக்கு அவர் தரப்பிலிருந்து ஏனோ சரியான அல்லது தரமான பதிலடி வந்ததாய் தெரியவில்லை. இந்த வேகத்திலிருந்தால் சிரமம்தான்” என்கிற இவர்கள்.

பழனிசாமி முன் தற்போது நிற்கும் சவால்களாக சில விஷயங்களைப் பட்டியலிடுகின்றனர்.
அவை என்னென்ன பார்க்கலாமா?

திமுக - காங்கிரஸ் கூட்டணி
திமுக – காங்கிரஸ் கூட்டணி

மிரட்டும் திமுக கூட்டணி!

சசிகலா, பன்னீர் இருவரும் விலகி விட்டதால் கட்சியின் உரிமை குறித்த சட்டச் சிக்கல்கள் நீங்கியிருக்கலாம். ஆனால் பொதுச் செயலாளராக கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டிய பெரும் பொறுப்பு உள்ளது. திமுக கூட்டணி வலுவாக இருக்கிற சூழலில் வரும் தேர்தலில் வெற்றி பழனிசாமி முன் நிற்கும் மிகப் பெரிய சவால்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இரண்டாவது இடத்துக்கும் போட்டி!

புதிதாக வந்திருக்கும் தவெக ஆரம்பம் முதலே அதிமுகவை பலவீனமான ஒன்றாகவே கருதுகிறது. போட்டி எங்களுக்கும் திமுகவுக்கும்தான் என மேடைக்கு மேடை பேசுகிறார் விஜய். அவருடன் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு போகவில்லை என்றாலும் புதிய ஓட்டுகள் அந்தப் பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக பரவலான கருத்து உள்ளது.

ஒருவேளை தேர்தல் முடிவு அதிமுகவுக்குச் சாதகமாக இல்லையென்றாலும் 2021 தேர்தல் போல வலுவான எதிர்க்கட்சியாகவாவது இருந்தால் தான் தப்பிக்க முடியும். அந்த இடத்துக்கு தவெக வந்து விட்டால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி விடும். இந்தச் சூழலை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதும் அவர் கையில்தான் இருக்கிறது.

மோடி – அமித்ஷா

காத்திருக்கும் பாஜக!

ஏற்கனவே பாஜக எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பதாக ஒரு கருத்து உலா வருகிறது. அதிமுக ஒன்றுபட இவர்தான் தடையாக இருந்தார் என நினைக்கிறது பாஜக தலைமை. எனவே தேர்தல் ரிசல்ட் சாதகமாக வராவிட்டால் மத்தியில் அதிகாரத்திலிருக்கும அவர்கள் பழனிசாமியை அகற்றி விட்டு வேறொருவரை அந்த இடத்தில் அமர வைக்கும் முயற்சியை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது.

சோர்வடையும் தொண்டர்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக இரட்டை இலை மீண்டும் துளிர்க்காதா எனக் காத்திருக்கும் தொண்டர்கள். ஐந்தாண்டுகள் கட்சி ஆட்சியில் இல்லாத நிலையில் மீண்டும் ஆட்சி அமையாவிட்டால் கட்சியின் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்குமே அது பெரிய மனச் சோர்வை உண்டாக்கும். ஏனெனில் கடந்த 35 ஆண்டுகளில் தொடர்ந்து பத்தாண்டுகள் அதிகாரத்தில் இல்லாத ஒரு சூழலை அவர்கள் சந்தித்திராத நிலையில், அப்படியொ சந்தர்ப்பம் உருவானால் அது தலைமையைக் கேள்விக்குள்ளாக்கி கட்சியையும் கலகலத்துப் போகச் செய்து விடலாம்.

இரட்டை இலை

ஆக மொத்தத்தில் பழனிசாமியின் நிலை, ‘போக்கிரி’ படத்தில் பிரகாஷ்ராஜ் பேசுவாரே ஒரு வசனம், அதே மாதிரி் தான் பழனிசாமிக்கும். 2026 தேர்தலில் மூன்று விஷயம் தான் வாய்ப்பு… ஒன்று ஜெயிக்க வேண்டும். ரெண்டு ஜெயிக்க வேண்டும். ஜெயிக்க வேண்டும், அது ஒன்று மட்டும்தான் அவர் முன்னால் நிற்கும் ஒரே சவால்.!

முடிவு, மே மாதம் தெரிய வரும்.!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *