Sorting by

×

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இது அமெரிக்காவிலும் எதிரொலித்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்றும், போர் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அவர் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ”ஈரானுக்கு எதிரான போர் குறுகிய காலமாக இருக்கலாம். ஆனால் இஸ்லாமிய குடியரசு ஒரு புதிய கடுமையான உச்ச தலைவரைத் தேர்ந்தெடுத்ததால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் தடைபட்டால் சண்டை அதிகரிக்கும் சாத்தியம் இருக்கிறது.

குறுகிய கால சுற்றுலா

சில தீமைகளிலிருந்து விடுபட மத்திய கிழக்குக்கு ஒரு சிறிய சுற்றுலா சென்றோம். இது ஒரு குறுகிய கால சுற்றுலாவாக இருக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஈரானில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு, ஈரான் பதிலளித்துள்ளது. “அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் எப்போது நிறுத்தப்படும் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.

நாங்கள் தான் முடிவு செய்வோம்

இது குறித்து இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இப்பிராந்தியத்தின் எதிர்காலம் இப்போது எங்கள் கைகளில் உள்ளன. போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம். போரை அமெரிக்க படைகள் முடிவுக்கு கொண்டு வராது” என்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த சில மணி நேரத்தில் அமெரிக்கத் தளபதி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “ஹார்முஸ் ஜலசந்திக்குள் எண்ணெய் ஓட்டத்தை தடுக்கும் வகையில் ஈரான் ஏதாவது செய்தால், அவர்கள் இதுவரை தாக்கப்பட்டதை விட இருபது மடங்கு அதிகமாக அமெரிக்காவால் தாக்கப்படுவர். கூடுதலாக, எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை நாங்கள் தாக்குவோம். இதனால் ஈரான் ஒரு தேசமாக மீண்டும் கட்டியெழுப்பப்படுவது சாத்தியமற்றதாகிவிடும். மரணம், நெருப்பு மற்றும் சீற்றம் அவர்கள் மீது ஆட்சி செய்யும்.

ஆனால் அது நடக்கக் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக பிரார்த்திக்கிறோம். இது சீனாவிற்கும், ஹார்முஸ் ஜலசந்தியை அதிகமாகப் பயன்படுத்தும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்காவிலிருந்து ஒரு பரிசு” என்று அவர் அதில் கூறியுள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது போரை முடிவுக்கு கொண்டு வர புடின் சில ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

அதேசமயம் போர் தொடருமானால் வளைகுடா பிராந்தியத்தில் இருந்து ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் ஹார்மோஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்து இருக்கிறது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி, உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கான உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடமாகும். அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக ஏற்கெனவே அப்பகுதியில் ஆயிரக்கணக்கான வணிகக் கப்பல் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. அதிகமான கப்பல்கள் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *