Sorting by

×

மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், “நீதித்துறை ஊழல்” குறித்த பாடம் இடம்பெற்றது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற பாடம் இடம்பெற்றிருக்கிறது. அதில் நீதித்துறையின் அமைப்பு பற்றி மட்டும் பேசாமல், அதன் சவால்கள் மற்றும் ஊழல் குறித்தும் விவரிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் 5.3 கோடி வழக்குகளின் (உச்ச நீதிமன்றத்தில் 81,000, உயர் நீதிமன்றங்களில் 62.4 லட்சம், மாவட்ட நீதிமன்றங்களில் 4.7 கோடி) புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

நீதித்துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசிய கருத்துகளும் அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன.

இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, “இதில் ஆழமான விசாரணை தேவை. இதற்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த வழக்கை இப்போதைக்கு முடிக்கப் போவதில்லை” என மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்தது.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய பள்ளிக் கல்விச் செயலாளர் மற்றும் என்சிஇஆர்டி இயக்குநருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

NCERT, “அந்தப் பாடத்தில் இடம்பெற்றிருந்த கருத்துகள் தவறு” எனக் கூறி மன்னிப்புக் கோரியது.

இதற்கிடையில், தற்போது இஸ்ரேல் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, “யார் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பியதோடு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நீதித்துறையை நாங்கள் உயரிய இடத்தில் வைத்து மதிக்கிறோம். அவர்களை அவமதிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். நீதிமன்ற உத்தரவுக்கு முழுமையாகக் கட்டுப்படுவோம்” என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “நாங்கள் இந்திய நீதித்துறைக்கு வணக்கம் செய்கிறோம். இந்திய நீதித்துறை இயங்கும் நடுநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் எப்போதும் நீதித்துறையை மதிக்க வேண்டும். அதன் பக்கமே நிற்க வேண்டும்.

NCERT பாடப்புத்தக விவகாரம் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு விஷயம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, இந்திய நீதித்துறையைப் போல சுதந்திரமான, தகுதியுள்ள மற்றுமொரு நிறுவனம் இந்தியாவிலோ அல்லது இந்த உலகத்திலோ வேறு எங்கும் இல்லை என்று என்னால் சொல்ல முடியும்.

இந்திய நீதித்துறையின் மீது நாம் அனைவரும் மிகுந்த மதிப்பும் பெருமையும் கொண்டுள்ளோம். இதுவே அனைவரின் இதயத்திலும் இருக்கும் உண்மையான உணர்வு” எனத் தெரிவித்தார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *