Sorting by

×

மதுரையிலும் திருச்சியிலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நடத்திய சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத சூழலே நிலவியது.

பியூஷ் கோயலுமே, “டெல்லியில் பேசிக்கொள்ளுங்கள்…” என்று டென்ஷனாகச் சொல்லிவிட்டு பறந்தார். இந்தச்சூழலில், நேற்று டெல்லிக்குச் சென்றிருந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீட் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கலந்தாலோசித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து, தே.ஜ கூட்டணியில் சீட் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் நடந்த எடப்பாடி – அமித் ஷா சந்திப்பு குறித்து, அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “டெல்லியிலுள்ள அமித் ஷாவின் இல்லத்தில், கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்துக்கு நடந்திருக்கிறது அந்தச் சந்திப்பு.

பேக்கேஜ் முறையில் பா.ஜ.க எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் சீட் ஒதுக்கீடு செய்ய எடப்பாடிக்கு விருப்பமில்லை. பா.ஜ.க-வுக்கு 25 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, அவர்களுடன் அணி சேர்ந்திருக்கும் அ.ம.மு.க-வுக்கு எட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று, ஐ.ஜே.கே கட்சிக்கு இரண்டு, ஏ.சி.சண்முகம், என்.ஆர்.தனபாலன், திருமாறன், ஜான்பாண்டியன் ஆகியோருக்கு தலா ஒன்று ஒதுக்க திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி.

அதோடு, பா.ம.க-வுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கியதுபோக, மீதமிருக்கும் 174 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களைக் களமிறக்கவும் முடிவெடுத்திருக்கிறார். அதில், ஒரு சீட் புரட்சி பாரதம் கட்சிக்கு வழங்கப்படவிருக்கிறது.

இதைத்தான் அமித் ஷாவிடம் தெளிவாக விளக்கியிருக்கிறார் எடப்பாடி. ‘உங்க கட்சிக்காரங்க அதிக சீட் வாங்கி போட்டியிடணும்னு நினைக்குறாங்க. அவங்க விருப்பத்தை நான் தப்பு சொல்லலை. கடந்த 2021 தேர்தல்ல, 20 தொகுதிகள் ஒதுக்கீடு செஞ்சோம். அதுல, நான்கு தொகுதிகள்ல தான் பா.ஜ.க வெற்றிப்பெற்றது.

பா.ஜ.க போட்டியிட்ட தொகுதிகள்ல தி.மு.க நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தி, பத்து தொகுதிகளை கைப்பற்றிவிட்டது. அதுபோன்ற நிலைமை மீண்டும் வரக்கூடாது. நீங்க கூடுதலான தொகுதிகள்ல போட்டியிட்டால், அது தி.மு.க-வுக்கு லாபமாக மாறிவிடும்.

உங்களோட இலக்கு 2029 நாடாளுமன்றத் தேர்தல்தான். அதுல, பத்து சீட் கூட கேட்டு வாங்கிக்கோங்க’ என்று கட் அண்ட் ரைட்டாக அமித் ஷாவிடமே போட்டுடைத்துவிட்டார் எடப்பாடி. அதில், அமித் ஷாவும் கன்வின்ஸ் ஆகிவிட்டார்.

அமித் ஷா

அடுத்ததாக, தேர்தல் செலவுகள் குறித்து பேச்சுவார்த்தை திரும்பியது. இதுவரையில், கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்காக தன்னுடைய பர்ஸை எடப்பாடி பழனிசாமி திறக்கவில்லை. அ.தி.மு.க வேட்பாளர்களுக்கும் பெரிதாக உத்தரவாதம் வழங்கவில்லை. அதையெல்லாம் எடுத்துப் பேசியிருக்கும் அமித் ஷா, ‘நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர். அதனால், நீங்கள்தான் செலவுக்கான பொறுப்புகளை ஏற்க வேண்டும்’ என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார்.

பா.ஜ.க., தன்னுடைய வேட்பாளர்களின் செலவுகளுக்காக சுமார் 300 ஸ்வீட் பாக்ஸ்களை தமிழகத்தில் இறக்கவிருக்கிறது. கூட்டணியிலிருக்கும் இதர கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் செலவுக்கான பொறுப்பை ஏற்க டெல்லி தயாராக இல்லை. அதைத்தான் எடப்பாடியிடமே பேசி, அவரையே செலவுகளுக்கு பொறுப்பேற்கச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா” என்றனர் விரிவாக.

டி.டி.வி.தினகரன் எதிர்பார்ப்பு

எடப்பாடியின் டெல்லி பயணத்தைத் தொடர்ந்து, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் இன்று டெல்லிக்குச் சென்றிருக்கிறார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்துப் பேசவிருப்பவர், அமித் ஷாவின் அப்பாயின்மென்ட்டையும் கேட்டிருக்கிறார்.

இரட்டை இலக்கத்தில் சீட் எதிர்பார்க்கும் தினகரனுக்கு, எட்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க பேசப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க திட்டமிட்டிருக்கிறது டெல்லி. அப்போது, தினகரனுக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிப்பது குறித்தும் பேசவிருக்கிறார்கள் டெல்லி பா.ஜ.க தலைவர்கள்.

பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி

சந்திராஷ்டம கணக்கு.!

நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், “நாளை(மார்ச் 21) சென்னை வரவிருக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எந்தெந்த தொகுதிகள் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பேசவிருக்கிறார். நாளையும் நாளை மறுநாளும் எடப்பாடி பழனிசாமிக்கு சந்திராஷ்டமம் என்பதால், மார்ச் 23-ம் தேதி கூட்டணி உடன்படிக்கையைக் கையெழுத்திட்டுக் கொள்ள திட்டமிடுகிறார்கள் அ.தி.மு.க-வினர்.

ஆனாலும்கூட, டெல்லியில் தன் துறை சார்ந்த பல்வேறு வேலைகள் இருப்பதைக் காரணமாகக் காட்டி, தன்னுடைய சென்னை விசிட்டிலேயே கையெழுத்து சம்பிரதாயங்களை முடித்துவிடப் பார்க்கிறார் கோயல்” என்றார்.

சீட் பங்கீடு, தொகுதி நிர்ணயத்தில் பல்வேறு முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டிருந்த தே.ஜ கூட்டணி, எடப்பாடியின் டெல்லி விசிட்டைத் தொடர்ந்து ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. விரைவிலேயே அடுத்தடுத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். !

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *